×

ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்; உலக சந்தை வீழ்ச்சியால் அமெரிக்கா பின்வாங்கியது: டிரம்ப் மீது மாஜி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அதிபர் டிரம்பின் முடிவை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய போரினால், உலக அளவில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சமீபத்தில் ஈரானின் இஸ்பஹான் மற்றும் கோரம்ஷார் பகுதிகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் மற்றும் எரிவாயு குழாய் இணைப்புகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதலை நடத்தின.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதிகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்தன. இந்நிலையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில், ‘பேச்சுவார்த்தைகள் மிகவும் நல்ல முறையிலும் ஆக்கப்பூர்வமாகவும் நகர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். ஆனால், இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆசிய சந்தையில் ஏற்பட்ட 3.5 சதவீதம் வீழ்ச்சி மற்றும் உலக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது முடிவு நீண்டகால திட்டம் கிடையாது. ஈரானின் உண்மையான எண்ணத்தை சோதிக்க டிரம்ப் முயல்கிறார். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதே டிரம்பின் முக்கிய நோக்கமாக உள்ளது’ என்று ஜான் போல்டன் தெரிவித்தார். அதேசமயம், அமெரிக்காவுடன் நேரடியாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த விவகாரத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மின்சார கிரிட்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இந்த ஐந்து நாள் கெடு முடிவடைவதால், அதன் பிறகு எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்தே போரின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிரி நாடுகளுக்கு ‘நோ என்ட்ரி’
சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில், பகைமை இல்லாத நாடுகளின் கப்பல்கள் ஈரான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் பிற நாடுகளின் கப்பல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படாது என்று அந்த கடிதத்தில் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், ‘பகைமை இல்லாத நாடுகளின் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிக்கப்படும்; ஆனால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடமில்லை’ என்று தெரிவித்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமைப்பில் 176 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் இவ்விவகாரத்தை சர்வதேச சட்டவிதிகளின் தீர்க்கப்படாமல் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளன.

தூது வேலை பார்க்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் மூலமாக 15 அம்சங்கள் கொண்ட போர் நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா தற்போது ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலின்படி, அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை அறிவித்து, இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ‘இஸ்ரேலின் சேனல் 12’ தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஈரான் தனது மண்ணில் யுரேனியம் செறிவூட்டுவதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே செறிவூட்டப்பட்ட பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பிரதிபலனாக ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளும் நீக்கப்படும். மேலும், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் புஷெர் பகுதியில் சிவில் அணுசக்தி மேம்பாட்டிற்கு ஈரானுக்கு உதவி வழங்கப்படும். தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையின்றி கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதிக்க வேண்டும் என்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும். எனினும், இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

டிரம்ப் பொய் பிரசாரம்
ஈரானுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் ஏற்கனவே உள்ள கடற்படைப் பிரிவுகளுடன் இணைய 82-வது ஏர்போர்ன் டிவிஷனைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர்களை அமெரிக்கா தற்போது அனுப்பி வைத்துள்ளது. பேச்சுவார்த்தை தொடர்பான டிரம்பின் கருத்துக்கு ஈரான் ராணுவத்தின் பொதுப் பணியாளர்கள் மற்றும் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘டிரம்ப் தமக்குத் தாமே பேசிக்கொள்கிறார். பதற்றம் தொடங்கியதில் இருந்து டிரம்ப் நிர்வாகத்துடன் நேரடித் தொடர்புகள் எதுவும் ஏற்படவில்லை. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் நிதிச் சந்தைகளை நிலைப்படுத்தவே டிரம்ப் இத்தகைய பொய்களைக் கூறி வருகிறார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான நேரத்தை வாங்குவதற்காகவே இந்த பழைய யுக்தியை டிரம்ப் கையாள்கிறார்’ என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, ஈரான் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

யாரையும் நான் நம்ப மாட்டேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஈரான் தரப்பினர் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அந்நாட்டின் கடற்படை, விமானப்படை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன. ஈரானை ராணுவ ரீதியாக நாங்கள் வீழ்த்திவிட்டோம். எங்களால் இப்போது எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும். டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் பல பகுதிகளில் எங்கள் நாட்டு விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. முக்கியமாக ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இப்போதுள்ள புதிய தலைமையுடன் நாங்கள் பேசி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு நேற்று ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கினார்கள். அது ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பானது. இருப்பினும் நான் யாரையும் நம்பமாட்டேன். ஈரானையும் நான் நம்பவில்லை. கூடுதல் உயிர்ப்பலிகள் இன்றி, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அழிக்காமல் இந்த விவகாரத்தை முடிக்க நினைக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு அவர்கள் உடன்பட்டுள்ளதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை அழிக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம்’ என்று டிரம்ப் கூறினார்.

Tags : Iran ,US ,Trump ,Washington ,United States ,President ,Israel ,
× RELATED முதல் கட்டமாக 23 பேர் அறிவிப்பு அதிமுக...