- கேரளா
- அசாம்
- புதுச்சேரி சட்டசபை
- புது தில்லி
- புதுச்சேரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மேற்கு வங்கம்
- புதுச்சேரி மாநில சட்டமன்றம்
புதுடெல்லி: கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 23ம் தேதி கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. இந்த முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள மொத்தம் 296 தொகுதிகளில் போட்டியிட ஆர்வமுள்ள வேட்பாளர்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்களது மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தற்போது வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்றும், இன்றும் நடைபெற்று வரும் நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நாளை (மார்ச் 26) கடைசி நாளாகும். வரும் ஏப்ரல் 9ம் தேதி இந்த மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரளா மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கு மொத்தம் 1,254 வேட்பாளர்கள் 2,125 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடைபெற்ற பரிசீலனையின் முடிவில் 1,637 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, 337 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கும் 1,110 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவை இன்றும் பரிசீலனையில் உள்ளன. அதேபோல் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் 350 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். 3 மாநிலங்களிலும் 3,600க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகி உள்ளதால், அந்த மனுக்கள் இன்றும் பரிசீலனையில் உள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை கடைசி நாள் என்பதால், அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மேற்கண்ட 3 மாநிலங்களின் அரசியல் களத்தைப் பொறுத்தவரை, கேரளாவில் ஆட்சியைத் தக்கவைக்க எல்.டி.எப் கூட்டணியும், வி.டி.சதீசன் தலைமையிலான யு.டி.எப் மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் தீவிரமாக மோதி வருகின்றன. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஏற்கனவே அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது. புதுச்சேரியில் ஆளும் ஏ.ஐ.என்.ஆர்.சி – பாஜக கூட்டணிக்கும், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேற்கண்ட மாநிலங்களில் ஏப். 9ம் தேதி தேர்தல் முடிந்தவுடன், தமிழ்நாட்டில் ஏப். 23ம் தேதியும், மேற்கு வங்க மாநிலத்தில் ஏப். 23, 29ம் தேதிகளில் அடுத்தகட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்காத வகையில் வரும் ஏப்ரல் 9ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணி வரை நாடு முழுவதும் ‘எக்ஸிட்’ போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
