நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளிமாநில சுற்றுலா பயணிகள் பலர் ஹோட்டல்களில் அறை எடுப்பதற்காகவும், உணவிற்காகவும் மற்றும் வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்ல அதிக அளவு பணம் எடுத்து வருவது வாடிக்கை. ஒரு குடும்பம் குறைந்தபட்சம் ஒரு ரூ.1 லட்சம் வரை எடுத்து வருவார்கள்.
குழுக்களாக வருபவர்கள் பல லட்சம் வரை கொண்டு வருவதுண்டு.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடம் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.
அப்போது அவர்கள், ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் வைத்திருந்தால் அந்த பணத்தை பறிமுதல் செய்கின்றனர். இதனால் சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் பணத்தை திரும்ப பெறுவதற்காக அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.
எனவே அவர்களுக்கு உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி தர வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்தது. தேர்தல் ஆணையம் சுற்றுலா பயணிகளுக்கு தளர்வு அளிக்கவும், 24 மணி நேரத்திற்குள் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், மும்பையை சேர்ந்த கர்னல் பிரசாத் ராவ் என்பவரிடம் பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை விசாரணைக்கு பின்பு உடனடியாக குன்னூர் உதவி கலெக்டர் சங்கீதா வழங்கினார்.
அதேபோல், கர்நாடக மாநிலம் குண்டல் பேட் பகுதியைச் சேர்ந்த ருத்தேஷ்குமார் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 ஒரு லட்சத்து 88 ஆயிரம் மீண்டும் வழங்கப்பட்டது.தற்போது சுற்றுலாப் பயணிகளிடம் பறிமுதல் செய்யப்படும் பணம் உடனுக்குடன் திருப்பிக் கொடுத்து வருவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
