×

கொடைக்கானலில் இரவு நேரத்தில் உலா வரும் காட்டெருமைகள்: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பீதி

கொடைக்கானல்: கொடைக்கானலில் இரவு நேரத்தில் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்துள்ளனர். அவைகளின் நடமாட்டத்தை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு தமிழகம் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். கோடை சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் கூட்டம் களைகட்டும். கொடைக்கானலில் 60 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது.

இங்கு ஏராளமான வனவிலங்குகளும், அரிய வகை பறவைகளும் வசித்து வருகின்றன. இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப்பகுதிகளில் உலா வருவதும், குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். கடந்த சில தினங்களாக பஸ்நிலையத்தில் இரவு நேரங்களில் காட்டெருமைகள் உலா வருகின்றன. நேற்று இரவு பஸ்நிலைய பகுதியில் காட்டெருமை கூட்டம் திடீரென உலா வந்தது.

பஸ்நிலையத்தில் இருந்த பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அலறியடித்து ஓடினர். ஒரு சிலர் காட்டெருமைகளை போனில் படம் எடுத்தனர். திடீரென ஒருவர் காட்டெருமையின் பின்னால் கைகளால் தாக்கினார். இதனால், அது மிரண்டு ஓடியது. இதனால், பஸ்நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனவே, கொடைக்கானலில் இரவு நேரத்தில் உலா வரும் காட்டெருமைகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal ,Kodiakanal ,FOREST DEPARTMENT ,Godaikanal ,Dindigul district ,Princess of ,Hills ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்...