×

மழைநீரை சேமித்தால் தண்ணீர் பஞ்சம் வராது..! காவேரி கூக்குரலின் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் பேச்சு

திருச்சி: விவசாயத்துக்கும் குடிநீருக்கும் முறையாக மழைநீரை சேமித்தாலே போதும், தண்ணீர் பஞ்சம் வராது என காவேரி கூக்குரலின் உலக தண்ணீர் தினக் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் பேசினர். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “வான் அமிர்தம்” என்ற மாபெரும் மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கு திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (22/03/2026) நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அதிகரித்து வரும் உப்புத் தன்மையைக் கட்டுப்படுத்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

நீர் நிலைகளைப் பாதுகாப்பதிலும் மழைநீர் சேகரிப்பை மக்களிடம் கொண்டு செல்வதிலும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆளுமைகளுக்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் “வாட்டர் வாரியர்ஸ்” விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்படி, கோவை குளங்கள் அமைப்பின் மணிகண்டன், கர்நாடகாவின் தண்ணீர் அறிவுசார் அறக்கட்டளை சுஜாதா ஐயப்பா மசாகி, கெளசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் செல்வராஜ், ஒளிரும் ஈரோடு அமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு நிபுணர் சிவசுப்பிரமணியன் மற்றும் கருத்தரங்க பேச்சாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், “காவேரி கூக்குரல் இயக்க கருத்தரங்குகள், எப்போதும் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளின் ஞானத்தை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் என பலர் பல்வேறு விதமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பின்பற்றி வருகின்றனர். இதனை பெரும்பான்மையான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் இந்த கருத்தரங்கை நடத்துகிறோம்.” எனக் கூறினார்.

இதனையடுத்து பேசிய கோவை வேளாண் பல்கலைக்கழக நீர் தொழில்நுட்ப மைய முன்னாள் இயக்குனர் பன்னீர்செல்வம், “வீடுகளில் ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு நீர் வீணாவதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 57,000 லிட்டர் நீர் வீணாகிறது. விவசாய நிலங்களில் ஒரே ஹெக்டர் நிலத்தில் அரிசி விளைவிக்க 1.2 கோடி லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது. ஆனால் இதில் பாதியளவு அதாவது 60 லட்சம் லி. நீரைக் கொண்டே அதிக மகசூலுடன் அரிசி விளைவிக்கலாம். நீர் சேமிப்பு என்பது நீர் உற்பத்திக்கு சமம்.

இதற்கான தொழில்நுட்பங்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. அதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மண்ணுக்கு மேல் சொட்டு நீர்ப்பாசனம் செய்யப்படுவது போல மண்ணுக்கு கீழும் செய்ய முடியும். இதன் மூலம் குறைந்தளவு நீரில் விவசாயம் முடியும்” எனக் கூறினார்.

கர்நாடக மாநிலம் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவகுமார் பேசுகையில், “தண்ணீர் பஞ்சம் என்பதை நம்ப வேண்டாம். நமக்கு கிட்டதட்ட ஒரே அளவில் தான் மழைநீர் கிடைக்கிறது. ஆனால் அதனை எப்படி மேலாண்மை செய்கிறோம் என்பதே முக்கியம். நீங்கள் அனைவரும் அதனை முறையாக சேமித்தால் அதிசயமான மாற்றம் நிகழும்.

வீடுகளில் பொழியும் முதல் மழையைத் தவிர்த்துவிட்டு, இரண்டாவது மழையிலிருந்து வரும் நீரைச் சேமிக்கலாம். மழைநீரை முறையான வடிகட்டிகள் கொண்ட குழாய்கள் மூலம் நேரடியாக தொட்டிகளில் சேமிக்கலாம். மழைநீர் மிகவும் தூய்மையானது, சேமிக்கும் தொட்டிக்குள் சூரிய ஒளி எந்த வகையிலும் செல்லாத வகையில் நாம் கட்டமைக்க வேண்டும். மழைநீருக்கு காலாவதி தேதி கிடையாது. ஆகையால் ஒரு வருட கால மழைநீரைக் கூட நாம் அப்படியே பருகலாம். நிலங்களிலும் இது போன்றே மழை நீரை சேமிக்க முடியும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், நீரின் உப்புத்தன்மை குறையும்.

உங்களின் வீடுகளில், நிலங்களில் மழை பொழியும் அளவு மற்றும் தளத்தின் அளவைப் பொறுத்து எவ்வளவு மழைநீரை சேமிக்க முடியும் என்பதை அறிய ‘RWH Advisor’ என்ற பிரத்யேக செயலியை உருவாக்கி உள்ளோம். இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.” எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து, மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் மூலம் மானாவாரி நிலங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளை எவ்வாறு சாத்தியப்படுத்தலாம் என்பதை சுஜாதா ஐயப்பா மசாகி விளக்கினார். மழைநீர் சேகரிப்பு நிபுணர் சிவசுப்பிரமணியன், குடிநீருக்கு RO நீரை விட மழைநீரே சிறந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, ஒரு மழையிலேயே 4,000 லிட்டர் நீரைச் சேமிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவிக்குமார், விவசாய நிலங்களுக்கான தனித்துவமான நீர் சேமிப்பு நுட்பங்கள் குறித்தும் கரூரைச் சேர்ந்த தங்கராசு, வீடுகளில் மழைநீர் சேமிப்பு குறித்தும் பகிர்ந்துகொண்டனர். மேலும், கருத்தரங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கண்காட்சியில் மழைநீர் சேகரிப்புக் கருவிகள், நவீன நீர்ப்பாசன முறைகள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

Tags : Kaveri Koukural ,Trichy ,World Water Day ,Kaveri ,Kukural ,Van Amritam ,Sadhguru ,Kaveri Cry Movement ,
× RELATED பாபநாசம் அருகே வாகன சோதனையில் ரூ.1...