×

ஈரான் போர் எதிரொலி: ஏர் இந்தியா விமானச் சேவைகள் பெரும் பாதிப்பு: 2,500 விமானங்கள் ரத்து!

டெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானச் சேவைகளை பெருமளவில் ரத்து செய்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காம்ப்பெல் வில்சன் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

போர்ச் சூழல் காரணமாகப் பல விமான நிலையங்கள் மற்றும் வான்வெளிப் பகுதிகள் மூடப்பட்டுள்ளதால், தற்போது மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏர் இந்தியா தனது வழக்கமான சேவையில் வெறும் 30 சதவீதத்தை மட்டுமே இயக்கி வருகிறது. இது சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போர்ச் சூழலால் பொருளாதார ரீதியாகவும் ஏர் இந்தியா சவால்களைச் சந்தித்து வருகிறது. உலகளவில் விமான எரிபொருள் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளதால், நிறுவனத்தின் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த கூடுதல் சுமையைக் ஈடுகட்டும் வகையில், புதிய விமான டிக்கெட்டுகளில் எரிபொருள் கட்டணத்தை ஏர் இந்தியா உயர்த்தியுள்ளது. இதனால் பயணிகளுக்கான பயணக் கட்டணமும் அதிகரித்துள்ளது, இது பயணிகளின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

குறிப்பாக, ஈரான் வான்வெளியைத் தவிர்க்க வேண்டியுள்ளதால் பிரிட்டன், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் நீண்ட சுழற்சி பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன், கூடுதல் எரிபொருள் செலவும் ஏற்படுகிறது. இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், சில பகுதிகளில் நிலவும் புதிய தேவைகளைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியா தனது சேவைகளைச் சீரமைத்து வருகிறது.

Tags : Iran ,Air India ,Delhi ,West Asia ,CEO ,
× RELATED எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான...