×

இந்தியா எல்பிஜி தட்டுப்பாடு: மங்களூரு வந்தடைந்த ‘பைக்ஸிஸ் பயோனியர்’ கப்பல்: எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்ப்பு!

பெங்களூரு: மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஆசிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான டன் எல்பிஜி (LPG) ஏற்றிக்கொண்டு ‘பைக்ஸிஸ் பயோனியர்’ என்ற கப்பல் இன்று நியூ மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் சுமார் 47,236 டன் எடையுள்ள இக்கப்பல், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நெதர்லாந்து துறைமுகத்திலிருந்து புறப்பட்டு 16,714 டன் எரிவாயுவை ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்காகக் கொண்டு வந்துள்ளது. இந்த விநியோகத்தைத் தொடர்ந்து, இக்கப்பல் நாளை காலை மீண்டும் புறப்படத் தயாராக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் 25-ஆம் தேதி வியட்நாம் நாட்டு கொடியுடன் கூடிய ‘அப்போலோ ஓசியன்’ என்ற மற்றொரு டேங்கர் கப்பல் 26,687 டன் எல்பிஜியுடன் மங்களூரு துறைமுகத்திற்கு வரவுள்ளது. முன்னதாக ‘ஷிவாலிக்’ என்ற கப்பல் கொண்டு வந்த எரிவாயுவை குஜராத்தின் வாடினார் துறைமுகத்தில் பெற்றுக்கொண்ட இக்கப்பல், இந்தியன் ஆயில் (IOCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனங்களுக்காக இந்த எரிவாயுவை வழங்க உள்ளது. இதுமட்டுமின்றி, மார்ச் 29 அன்று அமெரிக்காவிலிருந்து சுமார் 30,000 டன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் வரவுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்திற்காக வரும் இந்த எரிவாயு, மங்களூருவில் உள்ள ஆலையிலிருந்து குழாய் வழித்தடங்கள் மூலம் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், உள்ளூர் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கும் தடையின்றி விநியோகம் செய்யப்படும். அடுத்த வாரத்திற்குள் மொத்தம் 72,700 டன் எல்பிஜி மங்களூரு துறைமுகத்திற்கு வரவுள்ளதால், நாட்டில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : India ,Biksis ,Mangalore ,BANGALORE ,BIXIS BIONIER ,MIDDLE EAST ,
× RELATED அம்பத்தூர் திமுக பாக முகவர்கள்...