டெல்லி: விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்திய விமான நிலையங்கள் இன்று தினமும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைக் கையாளுகின்றன, இது இத்துறையின் விரைவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
பயணிகளின் வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் விமான நிறுவனங்கள் முழுவதும் நடைமுறைகளில் சீரான தன்மையை மேலும் வலுப்படுத்த, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மூலம் அமைச்சகம் பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது; நியாயமான அணுகலை உறுதி செய்வதற்காக, எந்தவொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும். ஒரே PNR-இல் பயணிக்கும் பயணிகள் ஒன்றாக, முன்னுரிமையாக அருகருகே உள்ள இருக்கைகளில் அமர வைக்கப்பட வேண்டும்.
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதற்கு, பொருந்தக்கூடிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, வெளிப்படையான மற்றும் பயணிகளுக்கு உகந்த முறையில் வசதி செய்து தரப்பட வேண்டும். விமான நிறுவனங்கள் செல்லப்பிராணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக தெளிவான, வெளிப்படையான கொள்கைகளையும் வெளியிட வேண்டும்.
குறிப்பாக தாமதங்கள், ரத்துசெய்தல் மற்றும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படும் நேர்வுகளில், பயணிகளின் உரிமைகள் கட்டமைப்பைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும். விமான நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் செயலிகள், முன்பதிவுத் தளங்கள் மற்றும் விமான நிலைய கவுண்டர்கள் முழுவதும் பயணிகளின் உரிமைகளைத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும்.
பரவலான அணுகலையும் விழிப்புணர்வையும் உறுதி செய்வதற்காக, பயணிகளின் உரிமைகளை பிராந்திய மொழிகளில் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், குறைகளைக் குறைப்பதற்கும், விமானப் போக்குவரத்துச் சூழல் முழுவதும் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களைப் பேணுவதற்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து உறுதியளித்துள்ளது.
