சென்னை : தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பில் இந்த முறை வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி விவரச்சீட்டுகளுக்கு பதிலாக ‘வாக்காளர் தகவல் சீட்டு’ வழங்கப்படும். அதில் வாக்குச்சாவடி மையம், தேர்தல் நடைபெறும் நேரம், நாள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். ஆனால் வாக்காளரின் புகைப்படம் இடம் பெறாது.
வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து (5) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) விநியோகிக்கப்படும். எனினும், இது வாக்காளர்களின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது.’ என்று தெரிவித்துள்ளது. வாக்களிக்கச் செல்லும் போது பூத் ஸ்லிப்புடன் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை உட்பட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.
