×

2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

சேலம், மார்ச் 18: சேலம் அழகாபுரத்தில் இரண்டு கோயில்களில் அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம், காணிக்கை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அழகாபுரம் அருகே காட்டூர் பிள்ளையார் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்தவுடன் பூசாரி, கோயிலை பூட்டி சென்றார். நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதிலிருந்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதேபோல், அதேபகுதியில் உள்ள கல்லுமேடு காளியம்மன் கோயிலிலும் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடியுள்ளனர். இதைதொடர்ந்து நகரமலை அடிவாரத்திலுள்ள ராஜகாளியம்மன் கோயிலுக்கு வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

அப்போது, கோயிலுக்கு அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் சத்தம் கேட்டு அங்கு வந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் மர்மநபர்கள் உண்டியலில் இருந்து எதையும் எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் வந்ததால் உண்டியல் பணம் தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோயில் மற்றும் அருகாமையில் உள்ள சிசிடிவி வீடியோ பதிவு குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோயில்களில் உண்டியலை உடைத்து திருடியது வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Salem ,Alagapuram ,Kattur Pillayar ,
× RELATED தொழிற்சாலைகளில் பாலியல் புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு கட்டாயம்