ஓமலூர், மார்ச் 18: சட்டமன்ற தேர்தலையொட்டி, ஓமலூரி நடத்தை விதிகள் அமல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை வணிகர்களும், பொதுமக்களும் பின்பற்றுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரமோ அல்லது வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வோ நடைபெறாமல் கண்காணிப்பது அவசியம். பிரிண்டிங் பிரஸில், தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில், அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி கண்டிப்பாக இருக்க வேண்டும். சட்டவிரோதப் பிரச்சாரப் பொருட்களை அச்சிடக்கூடாது. வங்கி மற்றும் நகை அடகு கடைகள், பெருந்தொகை பணப்பரிவர்த்தனை மற்றும் அதிகப்படியான நகைகள் கைமாறும்போது அவை உரிய ஆவணங்களுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
