திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (51). இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாலூர்க்காவு சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கவுன்சிலிங்கிற்காக சர்ச்சுக்கு வந்துள்ளார்.
அப்போது பாதிரியார் சந்தோஷ் சர்ச்சில் உள்ள ஒரு அறையில் வைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து அவர் தனது வீட்டினரிடம் விவரத்தை கூறினார்.
அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பெருவந்தானம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே பாதிரியார் சந்தோஷ் தலைமறைவானார். போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் வேளாங்கண்ணியில் அவர் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நேற்று அவரை வேளாங்கண்ணியில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கேரளாவுக்கு கொண்டு வந்தனர். விசாரணைக்குப் பிறகு பாதிரியார் சந்தோஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
