- சிங்கபெருமால்கோ
- செங்கல்பட்டு
- சந்திரன் (அ)
- கருபதி சந்திரன்
- Atur
- செட்டிப்பனியம்
- சிங்கப்பெருமால்கோ
- செட்டிப்புனியம் ரயில்வே
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (எ) கருப்பட்டி சந்திரன் (35). இவர், சிங்கப்பெருமாள்கோவில் அருகே செட்டிப்புண்ணியம் கிராமத்தில் தங்கி, ஒரு தனியார் நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்டும் டிரைவராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில், செட்டிப்புண்ணியம் ரயில்வே கேட் அருகே நேற்றிரவு 8 மணியளவில் சந்திரன் தனியே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து சந்திரனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
பின்னர் தலையில் பலத்த சேதமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய சந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சந்திரன் பரிதாபமாக இறந்தார். இப்புகாரின்பேரில் செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் நேற்றிரவு 11 மணியளவில் சிங்கபெருமாள்கோவில், பகத்சிங் நகரை சேர்ந்த அஜித் (30), விழுப்புரத்தை சேர்ந்த அவரது நண்பர் ராஜேஷ் (30) ஆகிய 2 பேரும் பைக்கில் மதுபோதையுடன் வந்து, நாற்காலியில் ஹாயாக அமர்ந்தபடி, நாங்கள்தான் சந்திரனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தோம் என்று போலீசாரிடம் கூறி சரணடைந்தனர். இக்கொலை சம்பவம் சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் நடந்ததால், காவல் நிலையத்தில் சரணடைந்த அஜித், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் சிங்கப்பெருமாள்கோவில் காவல்நிலையத்தில் நகர போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சிங்கப்பெருமாள்கோவில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, காவல் நிலையத்தில் சரணடைந்த ராஜேஷ், அஜித் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மறைமலைநகர் அருகே மகேந்திரா சிட்டி ஜங்ஷனில் பேட்டரி கடை நடத்தி வந்துள்ளார். இக்கடையில் சந்திரன் பேட்டரியை வாங்கியுள்ளார். பின்னர் அந்த பேட்டரி தரமற்றதாக இருந்ததால், அஜித்திடம் சந்திரன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அஜித் கடையின் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சந்திரன் திரும்பி சென்றதாகவும் தெரியவந்தது.
மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்திரனை தீர்த்துக் கட்ட அஜித் திட்டமிட்டு, அதற்காக விழுப்புரத்தை சேர்ந்த நண்பர் ராஜேஷ் மற்றம் ஒருவர் என 3 பேரும் நேற்றிரவு மதுபோதையில் இருந்த சந்திரனின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இக்கொலை வழக்கில் தப்பியோடி தலைமறைவான மற்றொரு கூட்டாளி குறித்து பிடிபட்ட அஜித், ராஜேஷ் ஆகிய 2 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.
