×

37 எம்பி பதவிக்கு போட்டியிட்ட 26 பேர் போட்டியின்றி தேர்வு; 11 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு: ஒடிசா, அரியானா, பீகாரில் குதிரை பேர அரசியலால் பரபரப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 37 எம்பி பதவிக்கு போட்டியிட்ட 26 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாளை 11 ராஜ்யசபா இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசா, அரியானா, பீகாரில் குதிரை பேர அரசியலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் 10 மாநிலங்களில் காலியாக இருந்த 37 இடங்களுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 9ம் தேதியுடன் கூடுதல் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை விலக்கிக் கொண்டனர். இதன் காரணமாக 26 வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி சார்பில் நிறுத்தப்பட்ட 7 வேட்பாளர்களும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் – சரத்பவார்), ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே (குடியரசு கட்சி), வினோத் தாவ்டே (பாஜக), ராம்ராவ் வாட்குடே (பாஜக), நாக்பூர் முன்னாள் மேயர் மாயா இவனேட் (பாஜக), ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் ஜோதி வாக்மரே மற்றும் மறைந்த துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த்த் பவார் (சிவசேனா) ஆகியோர் அடங்குவர்.

தமிழகத்தில் காலியான 6 இடங்களுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றித் தேர்வாகினர். திமுக சார்பில் திருச்சி சிவா, ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக சார்பில் மு.தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் சார்பில் எம்.கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜீவ் குமார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி மற்றும் நடிகை கோயல் மல்லிக், பாஜக சார்பில் ராகுல் சின்ஹா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அசாமில் பாஜகவின் ஜோகன் மோகன், தெராஷ் கோவாலா மற்றும் யுபிபிஐ கட்சியின் பிரமோத் போரோ ஆகிய 3 பேர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வேம் நரேந்தர் ரெட்டி ஆகிய 2 பேர் போட்டியின்றித் தேர்வாகினர்.

சட்டீஸ்கரில் பாஜகவின் லட்சுமி வர்மா மற்றும் காங்கிரஸ் கட்சியின் பூலோ தேவி நேதம் ஆகிய 2 பேரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனுராக் சர்மா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாறாக 10 மாநிலங்களைச் சேர்ந்த 26 வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலியாக உள்ள மீதமுள்ள 11 ராஜ்யசபா இடங்களுக்கு நாளை (மார்ச் 16) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகார் மாநிலத்தில் 5 இடங்களுக்கும், ஒடிசாவில் 4 இடங்களுக்கும், அரியானாவில் 2 இடங்களுக்கும் என மொத்தம் 3 மாநிலங்களில் இந்த வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை அந்தந்த மாநில சட்டப்பேரவை வளாகங்களில் நடைபெறும். இந்த 11 இடங்களுக்கு ஒரு இடத்திற்கு மேல் வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு முறை குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எம்.எல்.ஏ.க்கள் ஒற்றை மாற்று வாக்கு முறையில் வாக்களிக்க உள்ளனர். இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும் பிரத்யேக ஊதா நிற ஸ்கெட்ச் பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற பேனாக்களைப் பயன்படுத்தி வாக்களித்தால் அந்த வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாளை மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன், 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். பீகார் மாநிலத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடக்கும் நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் அவரது 20 ஆண்டு கால முதல்வர் பதவி முடிவுக்கு வருகிறது. அங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி தரப்புக்கும் இடையே கடைசி இடத்தைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. ‘அரசியல் சதித் திட்டங்களை முறியடிக்கவும், கட்சி மாறி வாக்களிப்பதைத் தவிர்க்கவும் எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்’ என்று பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளர் திலீப் ராயும் களத்தில் இருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. குதிரை பேரத்தைத் தடுக்க பிஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்களை புவனேஸ்வரிலேயே தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளன. அதேபோல் அரியானாவிலும் ஒரு இடத்தைப் பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அங்கு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை உறுதி செய்ய பாஜக சார்பில் மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெறும் இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Rajya Sabha ,Odisha, Ariana, Bihar ,New Delhi ,Odisha ,Ariana, Bihar ,
× RELATED ஒரே கட்டமாக நடக்கிறது: தமிழகத்தில்...