வாஷிங்டன்: உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் நோக்கில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்றுடன் 16வது நாளாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் அரசு அந்த கடல் வழிப்பாதையை மூடுவதாக எச்சரிக்கை விடுத்தது. இதன் விளைவாக, கடந்த 1ம் தேதி முதல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியதோடு, கப்பல் போக்குவரத்து 90 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது.
இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நேற்று முன்தினம் ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா துல்லியமான தாக்குதலை நடத்தியது. இதுகுறித்து பேசிய டிரம்ப், ‘ஈரானின் ராணுவ பலத்தை நாங்கள் 100 சதவீதம் முற்றிலும் அழித்துவிட்டோம். இருப்பினும் அவர்கள் ஓரிரு ட்ரோன்கள் அல்லது கடல் கண்ணிவெடிகள் மூலம் இடையூறு செய்யக்கூடும். எரிசக்தி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தால் அவர்களின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் முழுமையாக துடைத்தெறியப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், ‘ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க மற்ற நாடுகளின் கூட்டணியை திரட்டுவதாக டிரம்ப் கூறுவது வேடிக்கையாக உள்ளது. உண்மையில் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா உதவி கேட்டு கெஞ்சுகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு வளையம் ஓட்டைகள் நிறைந்தது’ என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு டிரம்ப் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், ஈரான் ஏவுகணைகள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.
ஈரானின் பொருளாதார உயிர்நாடி
ஈரான் அரசு தனது ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள தனது ஆதரவு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு கார்க் தீவையே நம்பியிருந்தது. இந்தத் தீவு ஈரானின் பொருளாதார உயிர்நாடியாகக் கருதப்பட்டது. ஏனெனில், அந்த நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை இந்த ஒரு இடத்தின் வழியாகவே நடைபெற்று வந்தது. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமான சேமிப்பு கிடங்குகள் மற்றும் ஆழ்கடல் ஏற்றுமதி முனையங்களை இந்தத் தீவு கொண்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் கார்க் தீவு மீது அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி ஜஸ்டின் ஃபுல்சர் கூறுகையில், ‘ஈரான் ஆட்சியின் நிதி நிலையை இந்தத் தாக்குதல் முற்றிலுமாக சிதைத்துவிட்டது. அவர்களின் பிராந்திய ஆதிக்கத் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.
போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை
அமெரிக்க அதிபர் டிரம்ப், என்.பி.சி நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய எனக்கு விருப்பமில்லை. ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பது போலத் தோன்றினாலும், அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்கக் கூடியதாக இல்லை. ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகளை அமெரிக்கப் படைகள் முழுமையாக அழித்துவிட்டன. உலகளாவிய கச்சா எண்ணெய் நெருக்கடியைத் தவிர்க்கவே, எரிசக்தி குழாய்களைத் தாக்கவில்லை. இருந்தாலும், அந்த தீவின் மீது மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார்.
