பழநி: பழநி பாஜவில் கோஷ்டி மோதல் உச்சகட்டம் அடைந்த நிலையில் இளைஞரணி தலைவர் கத்தியால் குத்தப்பட்டார். அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடே இறுதி செய்யப்படாத நிலையில் பழநி தொகுதி தங்களுக்குத்தான் எனக்கூறி பாஜவில் இரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜ கோஷ்டியின் ஒருதரப்பைச் சேர்ந்த எல்லைச்சாமி என்பவர் சமூக வலைத்தளங்களில் முன்னாள் பாஜ மாவட்ட தலைவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார். இவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்த பாஜ மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக இருக்கும் பழநி அருகே கோபாலபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (36) என்பவருக்கும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்து மோதல்கள் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்றிரவு எல்லைச்சாமி பழநி அருகே அ.கலையம்புத்தூரில் வீட்டு வாடகை வசூலிக்கச் சென்றுள்ளார். அப்போது பாலசுப்பிரமணிக்கும், எல்லைச்சாமிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது எல்லைச்சாமி தான் வைத்திருந்த கத்தியால் பாலசுப்பிரமணியை குத்தினார். இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணி பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
