×

மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை காட்பாடி அருகே

வேலூர், மார்ச் 11: காட்பாடி அருகே கடையில் பொருள் வாங்குவது போல வந்து மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்குட்டை குடியாத்தம் சாலை அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் படை வீரர். இவரது மனைவி சுமதி(63). இவருடன் அவரது தங்கை கோமதி வசித்து வருகிறார். சுமதி வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.50 மணியளவில் சுமதியின் கடை அருகில் 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்களில் ஒருவர் இறங்கி சுமதியின் மளிகை கடைக்கு வந்து பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாட்டில் மற்றும் மிக்சர் பாக்கெட் வாங்கியுள்ளார். தொடர்ந்து அதற்கான பணத்தை கொடுத்துள்ளார். அப்போது வேண்டுமென்றே சில்லரைகளை கீழே போட்டுள்ளார். இதனால் மூதாட்டி சுமதி சில்லரைகளை எடுக்க முயன்றபோது, தண்ணீர் பாட்டில் வாங்கிய ஆசாமி திடீரென சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தயாராக இருந்த பைக்கில் ஏறி மாயமானார். இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின்பேரில் காட்பாடி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Katpadi ,Vellore ,Vellore district ,Gadpadi ,Vadugankuttai ,Gudiyatham Road ,Anna… ,
× RELATED சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைப்பு வேலூரில் போதையில் ரகளை