×

10வது நாளாக போர் தொடரும் நிலையில் ஈரான் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு: டிரம்ப் கடும் எதிர்ப்பு

டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் அவரது தேர்வுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், போர் தீவிரமடையுமா? குறையுமா? என்பது கேள்வியாக உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த பிப். 28ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தின. இந்த அதிரடி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இந்த சூழலில், மறைந்த அலி கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி (59), ஈரானின் 3வது உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஈரானில் கடந்த 1979ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு, தந்தை வழி வாரிசாக ஒருவர் தலைமை பொறுப்பிற்கு வருவது இதுவே முதல் முறையாகும். தற்போது 10வது நாளை எட்டியுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான நேரடி போருக்கு இடையே, ஆன்லைன் வாயிலாக கூடிய நிபுணர்கள் குழு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனிக்கு ராணுவம் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், ‘ஈரானின் புதிய தலைவராக யாரை நியமித்தாலும், அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் இருக்க வேண்டும். எங்களது அங்கீகாரம் இல்லாமல் பதவியேற்பவர் நீண்ட காலம் நீடிக்க முடியாது. வாரிசு அடிப்படையில் மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டுள்ளதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த நியமனம் செல்லுபடியாகாது’ என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா இவ்வாறு பகிரங்கமாகத் தலையிடுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ஈரான் தரப்பில் கூறுகையில், ‘எங்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஈரானிய மக்களுக்கு மட்டுமே உள்ளது. இதில் அமெரிக்கா தலையிட எந்த அதிகாரமும் இல்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்றால், அவர் தனது தந்தையை விடவும் தீவிரமான கொள்கைகளைக் கொண்டிருப்பார் என்றும், இதனால் போர் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது ஈரானின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது அமெரிக்காவின் எப்-35 போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருவதால், அங்குள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் தனது தந்தை, தாய் மற்றும் மனைவியை வான்வழி தாக்குதலில் இழந்த மொஜ்தபா கமேனி, இனி வரும் நாட்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் தீவிர முன்யோசனை திட்டமிடல் கொள்கையை கடைபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* யார் இந்த மொஜ்தபா கமேனி?
ஈரானின் உச்ச தலைவராக நியமனம் செய்யப்பட்ட மொஜ்தபா கமேனி, 1965ம் ஆண்டு மஷ்ஹாத் நகரில் பிறந்தார். தனது தந்தை நாட்டின் உயரிய பதவியில் இருந்த போதும் எப்போதும் வெளிச்சத்திற்கு வராமல் நிழல் போலவே வாழ்ந்து வருகிறார். கடந்த 1991ம் ஆண்டு ஈரானின் புகழ்பெற்ற மதகுருவான அஜிசோல்லா குஷ்வாக்த் என்பவரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். தற்போதைய நிலவரப்படி டெஹ்ரான் நகரில் வசித்து வருவதோடு, அங்குள்ள மதப்பள்ளிகளில் ஆன்மிகப் பாடங்களைக் கற்பிப்பதில் தனது நேரத்தைச் செலவிட்டு வருகிறார். தனது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை எந்தவொரு அரசியல் லாபத்தையும் இவர் பெற முயன்றது கிடையாது. நாட்டின் 85 சதவீதம் மக்கள் இவரது முகத்தைக் கூட நேரில் பார்த்திராத அளவிற்கு மிக எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து வந்தார்.

* கச்சா எண்ணெய் விலை குறித்து டிரம்ப் கருத்து
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஈரான் அணுசக்தி அச்சுறுத்தலின் அழிவு முடிந்ததும், கச்சா எண்ணெய் விலை விரைவாக குறையும். இந்த குறுகிய கால எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவுக்கும் உலக பாதுகாப்பு, அமைதிக்கும் செலுத்தும் மிகக்குறைந்த விலையாகும்’’ என்றார்.

* இஸ்ரேலில் இந்தியர் காயம்
ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் நேற்று முன்தினம் இந்தியர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கழுத்தில் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகமும் நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

* சவுதியில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை
சவுதி அரேபியாவின் அல் கார்ஜியில் குடியிருப்பு பகுதியை ஈரானின் ஏவுகணை நேற்று முன்தினம் தாக்கியது. இதில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று உறுதி செய்துள்ளது. லேசான காயத்துடன் இந்தியர் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த தாக்குதலில் இறந்த 2 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் சவுதி சிவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சமூக ஊடக பதிவில் கூறப்பட்டுள்ளது.

* பக்ரைன் எண்ணெய் நிலையம் மீது தாக்குதல்
ஈரான் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்றதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் பக்ரைனின் முக்கியமான எண்ணெய் நிறுவனமான பாப்கோ எனர்ஜின் சிட்ரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் எண்ணெய் நிலையத்தில் இருந்து தீ கொளுந்து விட்டு எரியும் வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாப்கோ நிறுவனம் ‘போர்ஸ் மஜ்யூர்’ அறிவிப்பை வெளியிட்டது. போர்ஸ் மஜ்யூர் என்பது போர், இயற்கை பேரிடர் அல்லது வேலைநிறுத்தம் போன்ற கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகளால், ஒப்பந்தம் செய்து கொண்டவர்களுக்கு எண்ணெய் உள்ளிட்ட உற்பத்தி பொருட்களை வழங்க முடியாத நிலையை அறிவிப்பதாகும். இதுதவிர ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைராவில் ஒரு எண்ணெய் நிலையத்திலும் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஷைபா எண்ணெய் வயலை தாக்கும் பல டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவுதி அரேபியா கூறி உள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் நிலையம் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக அரபு நாடுகளின் எண்ணெய் நிலையங்களை ஈரான் குறிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஈரானில் 165 சிறுமிகள் பலியான தாக்குதலை நடத்தியது அமெரிக்கா
ஈரானில் கடந்த 28ம் தேதி போரின் முதல் நாளில் மினாபி நகரில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165 சிறுமிகள் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்த ஆதாரத்தையும் காட்டாமல் நேற்று முன்தினம் கூறி இருந்தார். இத்தகவலை நெதர்லாந்தை சேர்ந்த பெல்லிங்கேட் என்ற புலனாய்வு குழு மறுத்துள்ளது. ஈரான் பள்ளி மீது வீசப்பட்டது டோமாஹாக் ஏவுகணை என்பதை அக்குழு சில வீடியோ ஆதாரங்கள் மூலம் உறுதிபடுத்தி உள்ளது. இத்தகைய ஏவுகணையை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த ஏவுகணையை ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தி இருக்கும் புகைப்படங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

Tags : Khamenei ,Supreme Leader ,Iran ,Trump ,Tehran ,Mojtaba Khamenei ,US ,President ,Middle East region… ,
× RELATED அமெரிக்க, இஸ்ரேல் தூதர்களை...