நைரோபி: ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆப்ரிக்காவில் பொருளாதார பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இப்போர் நீடித்தால் ஆப்ரிக்காவில் பல நாடுகள் பணவீக்கத்தால் கடும் பாதிப்பை சந்திக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆப்ரிக்காவில் பெரும்பாலான நாடுகள் பெட்ரோலிய பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்தே உள்ளன. தற்போது ஈரான் போர் காரணமாக சர்வதேச பெட்ரோலிய பொருட்கள் விநியோகத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கரன்சி மதிப்புகள் சரிந்ததால் தென் ஆப்ரிக்காவில் பெட்ரோல் விலை 6 மாதத்தில் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
இதே போல, ஈரான் போர் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் தென் ஆப்ரிக்கா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கடுமையான விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது கச்சா எண்ணெய் பீப்பாய் 100 டாலருக்கு மேல் அதிகரித்துள்ளதால், எண்ணெய் வளம் மிக்க அங்கோலா, அல்ஜீரியா, லிபியா, நைரோபி, கானா போன்ற ஆப்ரிக்க நாடுகள் சற்று லாபத்தை சம்பாதித்தாலும், அந்நாடுகளில் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் சாலை மார்க்கமாகவே கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் பெட்ரோல் விலை உயர்வு போக்குவரத்து செலவை அதிகரித்து, அது மக்களின் வாழ்க்கை செலவுகளை கணிசமாக உயர்த்தி விடும். எண்ணெய், எரிவாயு விலைகள் அதிகரிக்கும் போது அந்நிய செலவாணி இருப்பும் கரைந்து போவதால் பணமதிப்புகள் குறையும். இது பணவீக்கத்தை அதிகரித்து பொருளாதார பதற்றத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய ஆப்ரிக்க நாடுகளாக சூடான், காம்பியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு, லெசோதா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
