×

அரும்பே அரும்பே…என்னை கடத்தி போ கரும்பே!

நன்றி குங்குமம் தோழி

ஒரு முழம் குண்டு மல்லி 1300. முல்லை, கனகாம்பரம், பிச்சிப் பூ, ஜாதிமல்லி 1500.

அட! இந்தப் பூக்கள் எல்லாம் இவ்வளவு விலைக்கு எங்க விக்கிதுன்னு தலை சுத்துதா..? நம் தமிழகத்தில் தர்மபுரியிலதான். எப்படி? எப்படி? எதுக்கு இத்தனை எப்படி? வாங்க என்னன்னு பார்த்துருவோம்.

அதாவது, பொழுது போக்கா ஆரம்பிச்ச செயல், மொத்த குடும்பத்தையும் எப்படி ஒருங்கிணைச்சது? ரஞ்சிதாவின் ஆர்வம் எப்படி வெற்றிகரமான தொழிலா மாறுச்சு. மல்லிகை, முல்லை, பிச்சிப் பூ, ஜாதிமல்லி பூக்கள் மாதிரியே அச்சு அசல் தோற்றம் அளிக்கிற இந்த செயற்கைப் பூக்கள் தயாரிப்பு தொழிலின் நுணுக்கங்கள் என்னென்ன? இதுக்குப் பின்னால இருக்கிற அவர் குடும்பத்தின் உழைப்பென விரிவாகவே பேச ஆரம்பித்தார் ரஞ்சிதா.

தர்மபுரியில வசிக்கும் ரஞ்சிதா விக்னேஷ் தன் தொழிலை கட்டமைச்ச விதம் வித்தியாசமானது. ஒரு தனியார் நிறுவனத்தின் மனிதவள துறையில(HR) ஏழு வருஷம் வேலை பார்த்தவராம் இவர். திருமணத்துக்குப் பிறகு, முதல் குழந்தை பிறக்க, வேலைய விட்டுட்டு வீட்ல இருந்த நேரம், சில்க் திரெட்(silk thread) மூலம் வளையல், காதணி போன்றவற்றை தயாரிச்சு, கல்யாணம், நிகழ்ச்சிகள்னு அணிந்து செல்ல, அதைப் பார்த்தவுங்க எங்க வாங்குனீங்கன்னு கேட்டுருக்காங்க. தொழில் செய்வதற்கான ஐடியா இங்கதான் வந்திருக்கு ரஞ்சிதாவுக்கு.

இந்த நிலையில், வளையலுக்கு மேட்சிங்கா தலையில வைக்க பூவும் சேர்த்து செஞ்சு தர முடியுமான்னு வாடிக்கையாளர்கள் கேட்டிருக்காங்க. இது கேட்க சாதாரண கேள்வியா இருந்தாலும், இதுதான் ரஞ்சிதாவோட தொழில் பயணத்தை திசை மாற்றி, செயற்கை பூக்கள் தயாரிப்புத் துறைக்குள் காலடி வைக்க திருப்புமுனையா இருந்திருக்கு.

தர்மபுரி மாதிரியான சின்ன ஊரில் செயற்கை பூக்கள் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பது கடினமானதாய் இருக்க, ஆன்லைன் மூலம் தேடியதில், கேரளாவை சேர்ந்த ஒருவர் நடத்தும் இலவச ஆன்லைன் வகுப்பு ஒன்று கண்களில் படுகிறது. அந்த வகுப்பு பெயர் பிட் கிளாஸ் (bitclass). இதுவொரு சுவாரஸ்யமான கான்செப்ட். முழுக்க முழுக்க கிரியேட்டிவிட்டி சார்ந்தது.

அதாவது, தர்மபுரி மாதிரியான கடைக்கோடி ஊரில் வசிக்கும் ஒருவர், கேரளா மாநிலத்தில் இருக்கிற ஒருத்தரிடம், ஒரு கலையை இலவசமா கத்துக்க முடியுதுன்னா இது தொழில்நுட்பத்தோட வளர்ச்சி இல்லாமல் வேறென்ன? இதுதான் மைக்ரோ தொழில்முனைவோர்களுக்கு மிகப்பெரிய கேம் சேஞ்சர்.

பிட் கிளாஸ் மூலம் ரஞ்சிதா ஃபோமிரான் (foamiran) என்கிற மெட்டீரியல் குறித்தும் தெரிஞ்சுக்குறாங்க. ஃபோமிரான் மெட்டீரியலோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இது முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தில் இருப்பதுதான். நமக்கு என்ன வண்ணம் தேவைப்படுதோ அதை நாமளே உருவாக்கிக்கலாம். வாடிக்கையாளர் கேட்கிற நிறத்தில் ரஞ்சிதாவால் துல்லியமா உருவாக்கி கொடுக்க முடிந்தது. நேச்சுரலாக பூக்கின்ற அத்தனை பூக்களோட கிரியேட்டிவிட்டியும் முழுசா இப்ப ரஞ்சிதாவின் கைக்கு வந்துருச்சு.

ஈரான் நாட்டில் தயாராகும் ஃபோமிரான் ஷீட்டுகளை, மும்பையில இருக்கும் ஒரு டீலர் மூலமா இறக்குமதி செஞ்சு வாங்குற ரஞ்சிதா, முதலில் இந்த ஷீட்டுகளை மெஷின் மூலம் வெட்டி சுருட்டுற வேலையை செய்யுறாங்க. பிறகு,அயன் பாக்ஸ் மூலம் ஷீட்டுகளை சூடேற்றி, இயற்கையான பூ வடிவம் போன்றே தத்ரூபமா மொட்டுக்களை உருவாக்குறாங்க. உதிரி உதிரியா தயாராகும் இந்தப் பூக்களை இறுதியில் தொடுத்து சரமாக்கி, இறுதி வடிவம் கொடுக்கும் பணியும் நடைபெறுது. ஒரு முழம் பூ சரத்தை தொடுக்க கிட்டத்தட்ட 190 முதல் 200 பூக்கள் தேவைப்படுது என்கிறார் இவர்.

கலைநயம் மிக்க ஒரு பொருளை தயாரிச்சுட்டா மட்டும் போதுமா? அதை சரியாகக் கொண்டுபோய் வாடிக்கையாளரிடம் சேர்க்கணுமே. இதற்கு ரஞ்சிதா தேர்ந்தெடுத்த வழிதான் ஹாலோ பட்ஸ்(Halo buds) வலைத்தளம் மற்றும் அவரின் இன்ஸ்டா பக்கங்கள்.வாய்மொழி வார்த்தைகளைவிட சிறந்த மார்க்கெட்டிங் இருக்கா என்ன? நமது தயாரிப்பை ஒருத்தர் வாங்கி பயன்படுத்தும்போது அதோட அழகையும், தரத்தையும் பார்த்து மத்தவங்களும் விசாரிக்க ஆரம்பிச்சுருக்காங்க.

விளம்பரங்களை கூட மக்கள் நம்பாமப் போகலாம். ஆனா, நண்பர்கள், உறவினர் சிபாரிசு செஞ்சா உடனே நம்பீருவாங்க. ரஞ்சிதாவின் தயாரிப்பின் தரம் இந்த வேலையை உடனடியா செய்ய, வாய்மொழியாவே பலருக்கும் பரவுது. நாம தயாரிக்கிற பொருளே நம்மளுக்காக பேசும்போது அதுக்கு கிடைக்கிற நம்பகத்தன்மை அதிகம் என்கிறார் அழுத்தமாய். ‘‘சென்னை, வேலூர், திருநெல்வேலி மாதிரியான தமிழக நகரங்களிலும், கர்நாடகா, ஆந்திரா, மும்பைன்னு பிற மாநிலங்களிலும் எனது தயாரிப்புக்கு ஆர்டர்கள் முதலில் குவியத் தொடங்கியது. ஆச்சரியமான விஷயம் என்னன்னா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மாதிரியான வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், இந்தியாவில் இருந்து திரும்பும் உறவினர்கள், நண்பர்கள் மூலம் என் தயாரிப்பு பூக்களை ஆசையாக வாங்கிக் கொண்டு போறாங்க.

வெளிநாட்டவர்களுக்கு இயற்கையில் பூக்கின்ற பூக்கள் கிடைப்பது கடினம் என்பதால், நீடித்து உழைக்கிற இந்த ஆர்டிபீஷியல் மல்லிகை, முல்லை, பிச்சி, ஜாதிமல்லி பூக்கள் மிகப்பெரும் வரமாய் அவர்களுக்கு இருக்கிறது. ஒருமுறை வாங்கிட்டா 4 வருடத்திற்கு கேரன்டி’’ என விரல் உயர்த்தி புன்னகைக்கிறார் ரஞ்சிதா.ஒரு சின்ன ஊர்ல ஒரு வீட்டுக்குள் நடக்கிற தொழில், எல்லை கடந்து பயணிக்கிறத நம்மால நம்பவே முடியல. இதுதான் டிஜிட்டல் உலகத்தின் புரட்சி. எங்கிருந்து தொழில் செஞ்சாலும், தரம் இருந்தால் உலகம் நம்மைத்தேடி ஆன்லைன் வழியாவும் வரும் என்பதற்கு ரஞ்சிதாவின் தொழில் எடுத்துக்காட்டு.

‘‘ஒரு முழம் பூவை உருவாக்க ஏழு முதல் எட்டு நபர்களின், ஆறு மணி நேரம் உழைப்பு இதற்குத் தேவைப்படுது. இந்த உழைப்புதான் பூவோட விலை நிர்ணயத்துக்கும் காரணமா இருக்கு’’ என்றவர், ‘‘என் முழு குடும்பத்தோட கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது’’ என்கிறார்.என் அம்மா, என் இரண்டு சகோதரிகள், எனது இரண்டு பாட்டிகள், என் நாத்தனார் மகன்கள் இருவர், என் கணவர் விக்னேஷின் 80 வயதுப் பாட்டி என குடும்பமாய் இதில் ஈடுபடுறோம். எல்லோருக்குமே இதில் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் கொடுக்குறேன். 80 வயசுலயும் ஒருத்தர் தொழிலில் தன்னோட பங்களிப்பை தர்றாருனா அது அவருக்கு எவ்வளவு பெரிய மன நிறைவையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும்.

என்னோட இரண்டு சின்னக் குழந்தைகளையும் கவனிச்சுக்கிட்டு, வீட்டுல இருந்தபடியே ஒரு தொழிலை வெற்றிகரமா நடத்தி, மாதம் லட்சங்களில் என்னால சம்பாதிக்க முடியுது’’ என புன்னகைத்தவர், ‘‘இன்ஸ்டா பக்கத்தில் என்னை மாதிரியே இந்தத் தொழிலை பலரும் செய்தாலும், அதை தடையா நான் பார்க்கல. போட்டி இருந்தால்தானே சிறப்பா செயல்படணும் என்கிற உந்துதல் வரும். என் தயாரிப்பின் தரம் மற்றும் எனது தனித்துவமான டிசைன்கள் மேல முழு நம்பிக்கை எனக்கு இருக்கு’’ என்கிறார் அழுத்தமாக தொழிலுக்கான தெளிவோடு.

தனது குடும்ப உறுப்பினர்கள் உருவாக்கிய உதிரிப் பூக்களை சரமாய் தொடுப்பதில் தொடங்கி, மார்க்கெட்டிங் செய்வது, ஆர்டர்களை பேக் செய்வது, அனுப்பி வைப்பது என ரஞ்சிதா தனி ஆளாய் தொழிலில் ஆவர்த்தனமே செய்கிறார்.‘‘என் வீட்டு ஹாலில் தயாராகி ஆன்லைனில் விற்பனையாகும் இந்த மலர்களை கடை ஒன்றைத் தொடங்கி, நேரடி விற்பனைக்கு கொண்டு செல்லும் எண்ணமும் இருக்கிறது. ஆன்லைன் வகுப்பு மூலம், மற்ற பெண்களுக்கும் கற்றுக் கொடுக்கும் எண்ணத்துடனும் இருக்கிறேன்’’ என்கிறார் இவர்.

தாத்தா ஆரம்பிச்ச கடையை அப்பா பார்த்து… அப்புறம் பையன் எடுத்து நடத்தி பேரனுக்கு கடத்துறதுன்னு… ஏற்கனவே நிறுவப்பட்ட நிறுவனத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு போறத பார்த்திருப்போம். ஆனா, இங்க குடும்பத்துக்காக வாய்ப்புகளை தேடுறதுக்கு பதிலா குடும்பத்துக்குள்ளேயே வாய்ப்புகளை உருவாக்குற இந்த அணுகுமுறை தொழில் முனைவு பற்றிய நம் பார்வையை கண்டிப்பாக மாற்றலாம்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Tags : Dharmapuri ,Tamil Nadu ,
× RELATED டாட்டூ அழிப்பதில் வலியும் வேதனையும் அதிகம்!