×

தங்கத்தை ஒப்படைத்த தங்க மகள்!

நன்றி குங்குமம் தோழி

கதையல்ல இது நிஜம்!! ஒவ்வொரு நாளும் பிழைப்புக்காக போராடுற ஒரு சூழல்ல நமது கைகளில் வாழ்நாள் முழுக்க சம்பாதிக்க முடியாத அளவுக்கான ஒரு புதையல் கிடைச்சா நாம என்ன செய்வோம்? இந்தக் கேள்வியே ரொம்ப மலைப்பா இருக்குல்ல?ஆனால், தொலைஞ்சு போன 45 சவரன் நகையை திருப்பி உரியவர்களிடம் ஒப்படைத்த தனியார் ஒப்பந்த நிறுவன தூய்மைப்பணியாளர் பத்மா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி தம்பதியர் என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சுக்க, அந்தப் பெண் தொழிலாளியோட ஒருநாள் எப்படிப்பட்டதுன்னு முதலில் நாம புரிஞ்சுக்கணும்.

அதிகாலை அஞ்சரை மணிக்கே தொடங்கி தி.நகர் பஜார் சாலைகளில் உள்ள குப்பைகளை பெருக்கி தெருக்களை சுத்தம் செய்றதுதான் 48 வயது நிறைந்த பத்மாவின் தினசரி வேலை. ஒரு துப்புரவு தொழிலாளியாக உழைப்பைத் தாண்டி, மனரீதியாய் கடினமான வேலை இது. பத்மாவின் கணவர் சுப்ரமணி ஆட்டோ ஓட்டுநர். இன்னைக்கு வேலைக்கு போனாதான் கூலி. போகலன்னா சம்பளம் வராதுன்ற நிலைமைதான் இருவருக்குமே. சமீபத்துலதான் பத்மாவின் சம்பளம் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரத்துக்கு உயர்ந்ததா அவுங்களே தெரிவிச்சாங்க. இந்த மாதிரியான சூழல்ல வாழுற ஒருத்தர் ஒரு நிமிஷம் கூட யோசிக்காம லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகையை திருப்பி கொடுத்திருக்காங்க என்பதுதான், அவர்களின் நேர்மையை இமயமலை உயரத்துக்கு இன்று கொண்டு போயிருக்கு. என்னதான் நடந்தது..? பத்மாவே நம்மிடம் பேசுகிறார்.

‘‘மதிய சாப்பாட்டு நேரம். இரண்டு மணி வாக்குல சூப்பர்வைசர் கண்ணில் படாத அளவுக்கு, தெருவோர மர நிழல் ஒன்றில் ஒதுக்குப்புறமா போய் உட்கார்ந்து ஓய்வு எடுத்தேன். அப்ப அங்கிருந்த தள்ளுவண்டி ஒன்னு மேல, ஒரு பிளாஸ்டிக் பை இருக்கறத பார்த்தேன். அப்ப மணி ரெண்டு. நல்ல பசி நேரம் வேற. கவர திறந்து பார்த்தா அருண் ஐஸ்க்ரீம் டப்பா ஒன்னு உள்ளார இருந்தது. யாரோ மறந்து வச்சிட்டு போயிட்டாங்கன்னு நினச்சு, வீட்டுக்கு போற வழியில சாப்பிட என் கை பை உள்ளார வச்சுட்டேன்.

என் கணவரோட வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பும்போது பசி தாங்க முடியல. சரி அதை எடுத்து சாப்பிடுவோம்னு உள்ளிருந்த டப்பாவ திறந்தா, டப்பா நிறைய நகைகள் பளபளன்னு இருக்கு. முதல்ல கவரிங் நகையா இருக்கலாம்னு நினச்சு, ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்த என் வீட்டுக்காரர்கிட்ட சொல்ல, கண்டதையும் ரோட்டுல இருந்து எடுக்காதன்னு சொல்லியிருக்கேன்ல எனத் திட்டியவாறே, வண்டிய ஓரமாக நிறுத்தி, ஒரு நகைய மட்டும் வெளியில் எடுத்து பார்த்தாரு. அதில் 916 முத்திரை இருந்துச்சு. அந்த நொடியில எங்களுக்கு புரிஞ்சிடுச்சு’’ என்ற பத்மாவும் சுப்ரமணியும் ‘‘சந்தோஷத்தை விட பயம்தான் எங்களுக்கு முதலில் வந்தது’’ என்கின்றனர் இயல்பாக.

சுப்ரமணியும் தெளிவாவே நம்மிடத்தில் பேசினார். ‘‘ஒரு நிமிஷம் கூட நாங்க யோசிக்கல. நாங்க எடுத்த முடிவு ஒன்னே ஒன்னுதான். உடனே பத்மா வேலை செய்யிற அலுவலகத்துக்கு போன் செய்து சூப்பர்வைசர் மற்றும் மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்ல, அவுங்க மூலம் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு தகவல் சென்ற கொஞ்ச நேரத்துல, நகையை தொலைச்ச உரிமையாளர் மனைவியோடு காவல் நிலையம் வந்திட்டாரு. நாங்களும் சூப்பர்வைசர், மேனேஜரோடு, பத்மாவுடன் பணியில் இருந்தவர்களையும் வரவழைத்து அழைத்துக்கொண்டு, நகை டப்பாவோடு பாண்டி பஜார் காவல் நிலையம் போனோம்’’ என்றவரைத் தொடர்ந்து பத்மா மீண்டும் பேசினார்.

‘‘எங்களைப் பார்த்ததும் நகைங்கள தொலைச்சவுங்களால சுத்தமா பேசவே முடியல. அவரோட மனைவி எங்களைப் பார்த்ததும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. ‘எங்க வாழ்க்கையே திருப்பி கொடுத்துட்டீங்க’ அப்படின்னு என்கிட்டயும் என் வீட்டுக்காரர் கிட்டயும் சொன்னாங்க. அந்த ஒரு நொடியில அது வெறும் நகையில்ல, இன்னொரு குடும்பத்தோட வாழ்க்கை… உழைப்பு… கனவு… எல்லாமேன்னு எங்களுக்கு புரிந்தது’’ என யதார்த்தமாகப் பேசி முடித்தார்.

‘‘சம்பவம் நடந்த அன்று இரவே, இந்த விஷயம் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு, பத்மா வேலை செய்யும் தனியார் நிறுவனம் மூலம் போகவே, அடுத்த நாள் காலையில முதலமைச்சர் அலுவலகத்தில இருந்து எங்கள் கைபேசிக்கு, ‘முதல்வர் உங்களை சந்திக்க விரும்புறார்… உடனே தலைமைச் செயலகம் வாங்க’ன்னு அழைப்பு வருது. எங்ககிட்ட இருக்குறது ஒரே ஒரு பட்டன் மொபைல்தான்’’ என சுப்ரமணி தங்களிடம் இருந்த நோக்கியா பட்டன் மொபைலை நம்மிடம் காட்ட, அவர்களை சந்தித்த நமக்கோ, இருவர் நிலையையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

நேற்றுவரை, சூப்பர் வைசருக்கு பயந்து, ஒதுக்குப்புறமா உட்கார்ந்த பத்மாவின் செயலால், இன்றைக்கு மாநிலத்தோட முதலமைச்சரே அவரை பார்க்க கூப்பிடும் நிகழ்வு சாதாரண விஷயமாக தமிழக மக்களால் பார்க்கப்படல. தலைமைச் செயலகத்துக்கு முதல்வரை சந்திக்கப்போன பத்மா மற்றும் அவரின் கணவர் சுப்ரமணி இருவரையும் முதலமைச்சர் ரொம்பவே அன்பா எளிமையா நடத்தியதுடன், பத்மாவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவு பரிசுகளையும் வழங்கி பத்மாவைக் கௌரவித்திருக்கிறார்.
‘‘ஒரு முதலமைச்சர் எங்களையும் அருகில் அழைத்துப் பேசும் அளவுக்கு அணுகக்கூடியவரா, மிக எளிமையா இருந்தாரு’’ன்னு எதிர்பாராத அந்த நிகழ்வையும், மகிழ்ச்சியையும் மனதில் அசை போட்டபடி பகிர்ந்த பத்மாவின் ஒரே மகன் பி.காம் படிச்சிருக்கிற விஷயத்தை தெரிந்துகொண்ட முதல்வர், அவருக்கு அரசு வேலைக்கு ஆவண செய்யச் சொல்லி அதிகாரிகள் கிட்ட உத்தரவிட்டதையும் நம்மிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்தனர்.

தமிழக முதல்வரோடு இவர்களின் சந்திப்பு ஒரு ஆரம்பம்தான். அதன் பிறகு பாராட்டுகள் தொடர் நிகழ்வாகவே மாற ஆரம்பிச்சிருக்கு. சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் அழைத்து வாழ்த்தியதுடன், மிகப்பெரிய நகைக்கடை நிறுவனங்களும் அழைத்து கௌரவிச்சதாக இருவருமே தெரிவித்தனர். இதுக்கு மேலயும் ஒரு ஆச்சரியமான விஷயம் பத்மாவுக்கு நடந்திருக்கு.
அதாவது, தமிழக அஞ்சல் துறையின் மத்திய கோட்டம், பத்மாவின் நேர்மையைப் போற்றும் விதமாய், அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால்தலை (my stamp) ஒன்றையும் வெளியிட்டு கௌரவித்ததுடன், பத்மாவின் பெயரில் அஞ்சல் வங்கியில் பிரீமியம் கணக்கும், 15 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு ஒன்றும் செய்து, அதற்கான கணக்கு புத்தகம் மற்றும் ஆவணங்களை முதுநிலை அஞ்சல் அலுவலரான விஷ்ணுராஜ் பத்மாவிடத்தில் வழங்கியிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த பத்மாவின் குடும்பத்தையே தன் வீட்டுக்கு அழைத்து பாராட்டியதுடன், பொன்னாடை போர்த்தி, தங்க செயின் ஒன்றையும் பத்மாவுக்கு அணிவித்து சிறப்பு சேர்த்திருக்கிறார். இவையெல்லாம் நேர்மைக்கான பரிசுங்கிறதைத் தாண்டி, ஒரு நல்ல செயலுக்கு நம்ம சமூகம் எப்படி எதிர்வினை ஆற்றுதுங்கிற நேரடி உதாரணங்களே இவை.முதலாவது நடந்தது, அரசாங்கம் கொடுக்கிற அதிகாரப்பூர்வமான அங்கீகாரம். அதேபோல் அஞ்சலகம் தபால்தலை வெளியிட்டதும் சாதாரணமான விஷயமில்லை. இதுவொரு சரித்திர பதிவு. ஒரு தனிப்பட்ட மனிதரோட நேர்மையை இந்த நாடு மறக்காதுன்னு சொல்ற மாதிரியான செயல்.

இது பத்மா மற்றும் சுப்ரமணியின் செயலை அழியாத ஒரு சின்னமாகவே மாற்றுதுஇரண்டாவது கார்ப்பரேட் நிறுவனங்கள், நகைக் கடை அதிபர்கள், சினிமா பிரபலங்கள் பாராட்டுறது மூலமா நாங்களும் நேர்மையை மதிக்கிறோம்னு அவங்க பிராண்ட்டின் மதிப்பை உயர்த்துறாங்க. சென்னையை சேர்ந்த சௌபாக்கியா குழுமம் பத்மாவை வைத்து அன்னதானத்தை தொடங்கி கௌரவித்ததை பத்மா, ‘‘எப்பவுமே நாங்கதான் வரிசையில நின்னு சாப்பாட்டை வாங்குவோம். ஆனால், என் கையால அன்னதானம் போட வச்சது எனக்கு நெகிழ்ச்சியா இருந்துச்சு’’ன்னு கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

மூன்றாவது இந்த சமூகம் கொடுக்கிற அங்கீகாரம். இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியமானது. இந்த சம்பவத்தின் உச்சகட்டமா அவர்கள் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். நகர் மகாத்மா காந்தி குடியிருப்பு நலச்சங்கம் அவங்களுக்கு ஒரு பிரமாண்டமான பொதுவிழாவே எடுத்து, அந்தப் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மொய் விருந்து மாதிரி நடத்தி அவர்களை பாராட்டியிருக்காங்க. அரசாங்கமோ நிறுவனங்களோ பாராட்டுறதைவிட ‘நீங்க எங்க ஆளு… உங்களை நினைச்சு நாங்க பெருமைப்படுறோம்’னு அவங்க கூடவே வாழ்ற மக்கள் கொண்டாடுறதுதான் எல்லாத்தையும்விட மிகப்பெரிய சந்தோஷத்தை அவங்களுக்கு கொடுத்திருக்கு. அதேபோல், நகையை தொலைச்ச உரிமையாளருக்கும் அவங்களுக்கும் இருக்கும் உறவும் தொடருது.

பொங்கல் அன்று பத்மாவின் வீட்டுக்கே குடும்பத்தோடு வந்த நகை உரிமையாளர், பத்மா மற்றும் சுப்ரமணியன் இருவருக்கும் புத்தாடைகளை வழங்கி, இருவருக்கும் மாலை அணிவித்து, காலில் விழுந்து வணங்கி நன்றி சொன்னதுடன், அன்பளிப்பா பணமும் கொடுத்திருக்காங்க. ஆனால், எங்கள் அடையாளத்தை வெளியில காட்ட வேண்டாம்னு கேட்டுக்கிட்டதா சொன்னவர்கள், அவர்கள் குறித்து நம்மிடம் எதுவுமே சொல்லல. இதுவும் ஒரு வகையில பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

இந்த மாபெரும் அங்கீகாரங்களுக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்துக்கும் நடுவுல இருக்கும் மிகப்பெரும் இடைவெளி எல்லாவற்றையும் யோசிச்சுப் பார்த்தால், நம் சமூகத்தில நேர்மைங்கிறது ரொம்ப அரிதான ஆச்சரியமான விஷயமா ஆகிடுச்சுன்னு நமக்கு காட்டுதா? இல்ல இன்னமும் நல்ல விஷயங்களை கண்டறிந்து அதை பாராட்டுகிற கொண்டாடுகிற நல்ல குணம் நம்மகிட்ட உயிர்ப்போட இருக்குன்னு காட்டுதா?

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED பெண்கள் பொலிவுடன் இருக்க..!