×

பள்ளிக்கரணையில் 25 கார் கண்ணாடிகளை உடைத்து மர்மநபர் ரகளை: அச்சத்தில் பொதுமக்கள்

 

வேளச்சேரி: பள்ளிக்கரணை சாய் கணேஷ்நகர் பாண்டியன் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் சிலர் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும், சாலைகளிலும் தங்களது கார்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மர்மநபர் ஒருவர், வீடு மற்றும் தெருக்களில் நிறுத்தியிருந்த 25 கார் கண்ணாடி களை கல்லால் அடித்து உடைத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர்கள் இதுகுறித்து பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை அடையாளம்காண சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர், சாலை ஓரம் நிறுத்திவைத்திருந்த கார் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்தது பதிவாகியிருந்தது. ஆனால், அவர் ஓட்டிவந்த பைக் எண் தெரியாதவாறு நம்பர் பிளேட்டில் கரி பூசி அடையாளத்தை மறைத்துள்ளார். இதனால் வாலிபரை அடையாளம் காண்பதில் சிரம்மம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் குறைவாக உள்ள பகுதி மற்றும் சிசிடிவி கேமரா குறைவாக இருக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து கார் கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது.

மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோன்று பள்ளிக்கரணை பகுதியிலும் இரவு நேரங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வந்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

Tags : Pandian ,Sai Ganeshnagar ,
× RELATED நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவம்:...