×

ஏற்கனவே 3 மனைவி போச்சு… கள்ளக்காதலியையும் அபகரித்ததால் ஓட்டல் உரிமையாளர் கொலை: ‘சாவில் இணைவோம்’ என கூறி காஸை திறந்து வீட்டுக்கு தீவைத்த காதலன்

சூலூர்: கோவை அருகே கள்ளக்காதலியை அபகரித்த ஓட்டல் அதிபரை கத்தியால் குத்திக்கொன்ற லாரி உரிமையாளர், வீட்டுக்கு தீ வைத்ததில் அவரும், காதலியும் காயமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே நாகமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (52). லாரி உரிமையாளர். ஆட்டோவும் ஓட்டி வந்தார். இவரது மனைவி இறந்துவிட்டார். இதனால், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான அன்பு எஸ்தர் (37) என்பவருடன் குடும்பம் நடத்தினார். அவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், அன்பு எஸ்தர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த திலீபன் (38) என்பவர் நடத்தும் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். திலீபனின் மனைவி மற்றும் குழந்தைகள் திருப்பத்தூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஓட்டல் அதிபர் திலீபனுக்கும் அன்பு எஸ்தருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக பிரேம் ஆனந்த் சந்தேகமடைந்தார். இதனையடுத்து இனிமேல் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அன்பு எஸ்தருக்கு தடை போட்டார். ஆனால், இதனை ஏற்க மறுத்து அன்பு எஸ்தர் மீண்டும் அங்கேயே வேலைக்கு சென்றார்.

கடந்த ஜனவரி மாதம் பிரேம் ஆனந்த் திடீரென ஓட்டலுக்கு சென்றார். அங்கு திலீபனும், அன்பு எஸ்தரும் ஒன்றாக அமர்ந்து காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பிரேம் ஆனந்த் வாக்குவாத்தில் ஈடுபட்டு அருகில் கிடந்த கத்தியை எடுத்து அன்பு எஸ்தரின் கழுத்தில் குத்தினார். தடுக்க முயன்ற திலீபனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து பிரேம் ஆனந்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்த நிலையில் முதல் மனைவி இறந்து விட்டதாகவும், 2வது மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டதாகவும், 3வது மனைவி வேறொருவருடன் ஓடி விட்டதாகவும், 4-வதாக அன்பு எஸ்தரை திருமணம் செய்து கொள்ளலாம் என இருந்தபோது அவர் அதற்கு மறுத்து ஓட்டல் வேலைக்கு சேர்ந்ததாகவும், ஓட்டல் உரிமையாளர் திலீபனுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த நான் அன்பு எஸ்தரை கொல்ல முயன்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 நாட்கள் சிறையில் இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், ஓட்டல் அருகே உள்ளவர்களிடம் பிரேம் ஆனந்த் விசாரித்தபோது அன்பு எஸ்தரும், திலீபனும் ஒன்றாக ஊர் சுற்றுவதாக தகவல் கிடைத்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர் தனக்கு கிடைக்க வேண்டிய காதலி மற்றவர்களுக்கு கிடைக்க கூடாது என திட்டம் தீட்டி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் காதலி வீட்டிற்கு கத்தியோடு சென்றார். கதவை தட்டியபோது எஸ்தர் கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது திலீபன் உள்ளே கட்டிலில் படுத்திருந்தார். ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அவர், திலீபனை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்திக்குத்தை தடுக்க முயன்றபோது அன்பு எஸ்தருக்கும் காயம் ஏற்பட்டது.

பின்னர் வீட்டினுள் இருந்த சமையல் காஸை திறந்துவிட்டு ‘சாகும் போதாவது நாம் ஒன்றாக சாகுவோம்’ என்று கூறி தீ வைத்தார். தீ மளமளவென பற்றி எரிந்தது. அன்பு எஸ்தர் வேறு அறைக்கு ஓடி தப்பினார். தீ பிரேம் ஆனந்த் மீது பற்றி எரிந்தது. தீயால் ஜன்னல்கள் வெடித்து சிதறின. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது வீட்டிற்குள் தீலிபன் 6க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அன்பு எஸ்தர் பலத்த காயங்களுடன் இருந்தார். பிரேம் ஆனந்த் 30 சதவீத தீக்காயங்களுடன் போராடினார். பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு அன்பு எஸ்தரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேம் ஆனந்தை கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags : Sulur ,Coimbatore ,Prem Anand ,Nagamanayakkan Palayam ,Sulur, Coimbatore district ,
× RELATED போலி ஆவணங்கள் முலம் இந்திய நாட்டின்...