×

போலிச்செய்திகளுக்கெதிரான விழிப்புணர்வு; 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை நேரடியாகச் சென்றடைந்த தகவல் சரிபார்ப்பக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற சொல்லிற்கு இணங்க, தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலோடு தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் போலிச் செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது.

சமூக வலைதளப் பயன்பாடு, தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. இதைப் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவுரையை விட எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவே முக்கியமானது.
எனவே, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தன் பணியின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருக்கு போலிச்செய்தி மற்றும் வெறுப்பு பேச்சின் தாக்கம் குறித்தும் மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,
● இணையவெளிப் பாதுகாப்பு,
● போலிச்செய்திகளின் தாக்கங்கள்,
● வெறுப்பு பேச்சின் விளைவுகள்,
● சமூகநீதியும் இட ஒதுக்கீடும்,
● அறிவியல் மனப்பான்மை, ஆகிய தலைப்புகள் இடம்பெறுகின்றன.

மேற்கண்ட தலைப்புகளில், பள்ளிச் சிறாருக்கு விளையாட்டு வழி பயிற்சி. கல்லூரி மாணவர்கட்கு ஆதாரங்களுடன் கூடிய செயல்முறை விளக்கங்கள். காவல் துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு நடப்புச் சிக்கல் மற்றும் எதிர்கொள்ளும் முறை குறித்த விளக்கங்கள் என, பிரிவுக்கேற்ப தனித்தனி பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பரவலாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், நாட்டு நலப்பணித்திட்ட குழுமத்துடன் இணைந்து, NSS திட்ட அலுவலர்களுக்கு பயிற்றுநர் பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டது. இதன் மூலம், அந்தந்த திட்ட அலுவலர்கள் (விரிவுரையாளர்கள், உதவி பேராசியர்கள், பேராசியர்கள் உட்பட) தத்தமது குழுக்களின் தன்னார்வலர்களுக்கு இந்த விழிப்புணர்வை உருவாக்கி வருகின்றனர்.

இவ்வாறாக, தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடத்தப்பட்டு வரும் இந்த விழிப்புணர்வு, 1,25,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி (அ) நிறுவனத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர் connectfcu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

வெறுப்புணர்ச்சியற்ற சமூகமே சமத்துவச் சமூகம்! போலிச்செய்திகளற்ற சூழலே ‘அறிவுச்சூழல்’

Tags : Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,Tamil Nadu Fact-checking Centre ,Special Scheme Implementation Department ,Department of Information and Public Relations ,Government of Tamil Nadu ,Deputy Chief Minister of ,
× RELATED வெயில் தாக்கம் நாளுக்கு நாள்...