*தாலுகா அலுவலகத்தில் இருந்து அகற்ற கோரிக்கை
திருமயம் : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கல்குவாரிகளில் பாறாங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கிரஷர்களுக்கு கொண்டு சென்று ஜல்லி கற்கள், எம்.சாண்டாகவும் மாற்றம் செய்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜல்லிக்கல்லு எம்.சாண்டுகளுக்கு தேவை அதிகம் இருப்பதால் கல் குவாரி உரிமையாளர்கள் அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பாறாங்கற்களை வெட்டி எடுப்பதாக புகார் எழுந்து வருகிறது.
இதனால் மாவட்ட நிர்வாகம் கல்குவாரி உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும் பெரும்பாலான கல் குவாரி உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே அதனை கண்காணிக்கும் அதிகாரிகள் அவ்வப்போது திருமயம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு அனுமதி இன்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதும். அனுமதியின்றி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் முண்டு கற்கள் (சக்கை கற்கள்) லாரியுடன் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு அனுமதியின்றி லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட முண்டு கற்கள் லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அபதாரம் செலுத்தி விடுவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் இருந்து ஆயிரக்கணக்கான டன் அளவுள்ள முண்டுக்கற்கள் தாலுகா அலுவலக வளாகத்திலேயே பல மாதங்களாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிராவல் மணல்களும் கொ ட்டி வைக்கப்பட்டுள்ளது.
இது தாலுகா அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து உள்ளதால் தாலுகா அலுவலகம் பார்ப்பதற்கு கல்குவாரி போல் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரிகள் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், முண்டுகற்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
