சென்னை: சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க பிப்ரவரி 26, 27 -ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வரவுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், வருமான வரி, ED அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்தவுள்ளார். மார்ச் மாதம் மத்தியில் தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. துணை தேர்தல் ஆணையர் ஏற்கனவே தமிழ்நாட்டில் 3 நாட்கள் முகாமிட்டு ஆலோசனை நடத்தியிருந்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகளாம் என எதிர்பார்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு வந்து அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை முழுமையாக ஆய்வு செய்வார்கள். அதன்படி வரும் 26, 27 -ல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு தமிழகம் வந்து சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
26-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 26-ம் தேதி மாலை வருமான வரிதுறை, CRPF, ரயில்வே, தபால் துறை, போதைப்பொருள் தடுப்பு , ED என தேர்தல் தொடர்பான 20 ஒருங்கிணைப்புதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
இதனை தொடர்ந்து 27-ம் தேதி காலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பல்வேறு நிலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதனை தொடர்ந்து 27-ம் தேதி மாலை செய்தியாளர்களை சந்தித்து விரிவாக விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
