சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ‘ரோப் கார்’ வசதி, பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு புதிய பேருந்துகள், புற்றுநோயை கண்டறிய நவீன பரிசோதனை உள்ளிட்ட 90 முக்கிய அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சியின் 2026-27ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் மேயர் பிரியா, 2026-27ம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். முன்னதாக, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கியதற்கும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேயர் நன்றி தெரிவித்தார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
மெரினாவில் ‘ரோப் கார்’ சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை பொது-தனியார் பங்களிப்புடன் கயிறு வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னைவாசிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும். மாநகராட்சிக்கு உட்பட்ட 250 பள்ளிகளில் வகுப்பறைகள், சமையற்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை ஒரே மாதிரியான வண்ணக் குறியீட்டுடன் சீரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களை அழைத்து வரவும், கல்விச் சுற்றுலா செல்லவும் ரூ.4 கோடியில் 11 புதிய பேருந்துகள் வாங்கப்படும். 180 பள்ளிகளில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 46 உயர்நிலைப் பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள். மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த நவீன அறிவியல் மையம் உருவாக்கப்படும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் எச்.பி.வி (HPV) வைரஸை கண்டறிய 360 சுகாதார மையங்களிலும் ரூ.1 கோடியில் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும். பழுதடைந்த மாவட்ட காசநோய் மருத்துவமனைக்கு மாற்றாக ரூ.5 கோடியிலும், தொற்று நோய் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவுக்கு ரூ.6 கோடியிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். ரூ.3.50 கோடியில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க முகாம்கள் நடத்தப்படும். ஜார்ஜ்டவுன், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.110 கோடியில் மறுவடிவமைப்பு செய்யப்படும். அண்ணாநகர், தி.நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் அமையவுள்ள பார்க்கிங் இடங்களில் மின்வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். தண்டையார்பேட்டை, கே.கே.நகர் உள்ளிட்ட மண்டலங்களில் பள்ளிக்கு செல்லும் பாதுகாப்பான வழித்தடங்கள் ரூ.200 கோடியில் உருவாக்கப்படும். அம்பத்தூர், மஞ்சம்பாக்கம் ஏரி உள்ளிட்ட 30 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘பசுமை சென்னை’ திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்கேற்புடன் மரக்கன்றுகள் நட ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 200 பூங்காக்கள் ரூ.60 கோடியில் அறிவியல் பூர்வமாக பொலிவுபடுத்தப்படும். 5 பூங்காக்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக வசதிகளுடன் மேம்படுத்தப்படும். கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில், மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கோடைகாலம் முழுவதும் குளிர்ச்சியான மோர் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் முதல் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம் வரை ரூ.10 கோடியில் பாரம்பரிய விளக்குகளுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படும். சேத்துப்பட்டு ரயில்வே கேட் அருகே ரூ.25 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் நடைபாதை, மிதிவண்டிப் பாதையுடன் கூடிய பசுமையாக்கல் திட்டம் ரூ.45 கோடியில் செயல்படுத்தப்படும். பட்ஜெட் மீதான விவாதம் வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மற்றும் எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மாநகராட்சி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
