டெல்லி: சிறையில் உள்ள இம்ரான்கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் 14 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், கவாஸ்கர், கங்குலி, ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், ஆலன் பார்டர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடந்த 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 2023-ல் ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இம்ரான் கானின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அவரது கண்பார்வை சுமார் 85 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் உலகின் ஈடுஇணையற்ற வீரரான இம்ரான் கானின் கண்பார்வை குறைந்து வருவது தங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முன்னாள் கேப்டன்கள், இம்ரான்கான் விரும்பும் தனிப்பட்ட மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கவேண்டும், கண்ணியத்துடன் நடத்தவேண்டும் என்று பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டு அறிக்கையில் இந்தியாவின் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் மைக்கேல் ஆதர்டன், ஆலன் பார்டர், மைக்கேல் பிரியர்லி, கிரெக் சேப்பல், இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், டேவிட் கோவர், கிம் ஹியூஸ், நாசர் ஹுசைன், கிளைவ் லாயிட், ஸ்டீவ் வா மற்றும் ஜான் ரைட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஒரு முன்னாள் பிரதமராகவும், விளையாட்டு உலகின் நட்சத்திரமாகவும் திகழ்ந்த ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற இக்கோரிக்கை தற்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
