×

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லியில் முகாம் வேலூரில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு

வேலூர்: வேலூரில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர். வேலூர் அடுத்த பள்ளஇடையம்பட்டியை சேர்ந்தவர் ரமணி(47). இவர் கடந்த 7ம்தேதி வேலூர் பெண்கள் சிறை அருகே மொபட்டில் சென்றார். அப்போது, அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் ரமணி கழுத்தில் அணிந்திருந்த மூன்றே முக்கால் சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து ரமணி பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் அடுத்த அடுக்கம்பாறை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் ஷாலினி(39). இவர் கடந்த 7ம் தேதி வேலூர்-ஆரணி சாலையில் சாத்துமதுரை அருகே மொபட்டில் வந்தபோது, அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் ஷாலினி கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஷாலினியிடமும் ரமணியிடமும் நகை பறித்தது ஒரே பைக் ஆசாமிகள்தான் என தெரிய வந்தது. நகை பறித்தவர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வேலூரில் நடந்த 2 நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர்கள் டெல்லியில் இருந்து ரயிலில் பைக்கை காட்பாடிக்கு வரவழைத்துள்ளனர். பைக் இங்கு வந்ததும் அதில் நம்பர் பிளேட் பொருத்தாமல் தங்க நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படையினர் டெல்லிக்கு விரைந்துள்ளனர். அங்கு முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். விரைவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்றனர்.

Tags : Camp Vellore ,Delhi ,Vellore ,Ramani ,Mobat ,Vellore Women's Prison ,
× RELATED மயான கொள்ளை விழா கோலாகலம் அணைக்கட்டு, சின்னதெள்ளூர், பென்னாத்தூரில்