×

அறுந்து விழுந்த, இணைப்பு துண்டிக்கப்பட்ட மின்கம்பிகள் சீரமைப்பு பாலாற்றில் குவிந்த குப்பைகளும் அகற்றம் வேலூர் மயானக்கொள்ளை விழாவில்

வேலூர், பிப்.18: வேலூர் மயானக் கொள்ளை விழாவில் அறுந்து விழுந்த மற்றும் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்ட உயர் அழுத்த மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டதுடன், பாலாற்றில் குவிந்த குப்பைகளும் நேற்று காலை அகற்றப்பட்டன. வேலூர் மயானக் கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில் வேலூர் அம்பேத்கர் நகர், ஓல்டு டவுன், சலவன்பேட்டை, தோட்டப்பாளையம், அருகந்தம்பூண்டி, முள்ளிப்பாளையம், கழிஞ்சூர், விருதம்பட்டு, வெண்மணிமோட்டூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து 10 அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் அங்காளம்மன் ஊர்வலமாக பாலாற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு மயானக் கொள்ளை சூறையாடல் வழிபாடு நடந்தது.

இதில் கழிஞ்சூரில் இருந்து கொண்டு வரப்பட்ட தேர் திருவிழா முடிந்த நிலையில் மீண்டும் கழிஞ்சூர் செல்வதற்காக, மயானத்தை ஒட்டிய பாலாற்று பாலத்தில் திரும்பியது. அப்போது தேர் ஒரு பக்கமாக சரிந்து கவிழ்ந்தது. இதில் 7 பேர் சிக்கி காயமடைந்தனர். மேலும் உயர்அழுத்த மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. அதேபோல் முன்கூட்டியே மின்நிறுத்தம் செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் சரிந்து விழுந்த தேரின் பாகங்களை அகற்றும் பணியையும், பாலாற்றங்கரையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணியையும் நேற்று காலை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். அதேபோல் அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்கம்பிகளையும், தற்காலிகமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்ட மின்கம்பிகளை மின்வாரிய பணியாளர்கள் சீரமைத்தனர்.

Tags : Palar ,Vellore Mayanakolkai festival ,Vellore ,
× RELATED குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை...