×

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச திமுக குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளன.

இந்த முறை தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி, தவெக தலைமையில் இன்னொரு அணி, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என 4 முனைப்போட்டி நிலவுகிறது. திமுக பலம் வாய்ந்த கூட்டணியுடன் களம் காண இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த அதே கட்சிகள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

அதாவது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கைகோர்த்துள்ளது. இன்னும் சில கட்சிகள் வர உள்ளன. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி) அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளை கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது.

இதற்காக இந்த குழு மாவட்ட வாரியாக சென்று கருத்துகளை கேட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் திமுக சார்பில் அடுத்தடுத்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை 234 தொகுதிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரம் இந்த மாதம் முழுவதும் நடக்கிறது. இதே போல அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடியும் பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

அதே நேரத்தில் தொகுதி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் இதுவரை தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதி என்பது குறித்து பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை. தேர்தல் தேதி நெருங்குவதால் விரைவில் இந்த பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம், எந்த தொகுதி என்பது தெரியவரும்.

இந்நிலையில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய பட்ஜெட் பெரிய ஏமாற்றம் அளித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்” என்றார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு: கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்? விரைவில் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு, கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கும். தேர்தல் கருத்து கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ளதே? நீங்களும் சாதகமாக இருங்கள். புதிய எதிரிகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நாங்கள் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

* தமிழக சட்டப்பேரவை தேர்தல் இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

* தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளன.

* ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி, தவெக தலைமையில் இன்னொரு அணி, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

* திமுக பலம் வாய்ந்த கூட்டணியுடன் களம் காண இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த அதே கட்சிகள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

* அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி) அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Tags : DIMUKA GROUP ,. K. ,Stalin ,Chennai ,First Minister ,MLA ,Dimuka ,K. Stalin ,Tamil ,Nadu Legislature ,
× RELATED மக்கள் தொண்டைத் தொய்வின்றித்...