- புதுச்சேரி
- திமுகா
- பஜாவா கலைதா காங்
- மாஜி சி. எம் புதுச்சேரி
- கம்ராஜ் நகர்
- சட்டமன்ற உறுப்பினர்
- Jankumar
- காங்கிரஸ்
- பி.ஜே.பி கூட்டணி
- வேந்தர்
- மார்ட்டின்
- லாஜகா பார்ட்டி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள பாஜ அமைச்சரான காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமாருக்கு 6 மாதத்துக்கு மேலாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனும், லஜக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் நெருக்கம் காட்டுவதால் அவருக்கு இலாகா ஒதுக்காமல் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக முதல்வர் ரங்கசாமி புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜானகிராமன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, பாஜ அமைச்சர் ஜான்குமாரும் அங்கு வந்து படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடனே முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஜான்குமாரிடம், ‘வாருங்கள் இலாகா இல்லாத அமைச்சரே நலமா?, முதல்வர் ரங்கசாமி எப்போது உங்களுக்கு இலாகா ஒதுக்குவார்?’ என சிரித்தபடியே கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜான்குமார், ‘முடியறதுக்குள்ள கொடுத்துடுவாங்க.. இலாகா ஒதுக்கிய 2 நாளில் ராஜினாமா செய்து விடுவேன்’ என விரக்தியுடன் பதில் அளித்தார். ‘கடந்த தேர்தலில் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தால் மூடப்பட்ட மில்லை திறப்பார், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுப்பார் என்று சொன்னீர்களே? அது நடந்ததா?’ என மீண்டும் நாராயணசாமி கேள்வி எழுப்பி, ‘நீங்கள் அப்போது பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது.
அதை வரும் தேர்தலில் மக்களிடம் காட்டி பிரசாரம் செய்வோம்’ என்றார். அதற்கு ஜான்குமார், ‘அடுத்த முறை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரங்கசாமி நிச்சயமாக மில்லை திறப்பார்’ என பதில் அளித்தார். ‘இதை சொல்லும் நீங்கள், அடுத்த முறை பாஜவில் இருப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஜான்குமாரை கலாய்த்தார்.
இதனால் ஜான்குமார் பதில் பேச முடியாமல், வணக்கம் செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றபோது, அவரது தோளை தட்டி நாராயணசாமி வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
