×

திருப்பதி கோயிலில் நாளை முதல் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்றுமுன்தினம் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளான வைகுண்ட ஏகாதசி நாளில் 67 ஆயிரத்து 53 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் ரூ.2.25 கோடியை உண்டியலில் காணிக்கை செலுத்தினர். 2ம் நாளான நேற்று வைகுண்ட துவாதசியையொட்டி 70 ஆயிரத்து 256 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.79 கோடி காணிக்கையாக செலுத்தினர். கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 399 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துரூ.7.04 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல் கடந்த 2 நாட்களில் 41 ஆயிரத்து 43 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 8ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் முதல் 3 நாட்களுக்கான இலவசமாக ஆன்லைனில் குலுக்கல் மூலம் தேர்வு செய்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 3ம் நாளான இன்றிரவு வரை தரிசனம் செய்ய உள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை முதல் 8ம் தேதி வரை, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட் என ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் வழங்கப்பட்ட பக்தர்களுக்கும் திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கும் நாளை காலை முதல் இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக இன்று இரவு முதலே இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘’சொர்க்க வாசல் தரிசனத்திற்காக இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து காத்திருப்பு நேரம் இருக்கும் என்பதால் வரிசைகள் முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கேமிராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

அதன்மூலம் பக்தர்களுக்கு துல்லியமாக சுவாமி தரிசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என அவ்வப்போது வரிசைகளில் பொருத்தப்பட்டுள்ள ‘டிஸ்ப்ளே’ மூலம் அறிவிக்கப்படும். எனவே பக்தர்களுக்கு வரிசைகளிலேயே அவ்வப்போது பால், காபி அன்னப்பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தங்களுக்கான நேரம் வரும் வரை பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகள், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தரிசனம் செய்ய வேண்டும்’ என்றார்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 8ம்தேதி வரை சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

12 மணிக்கு கோவிந்தா முழக்கம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே நேற்றிரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக ‘கோவிந்தா கோவிந்தா’ என்று முழக்கமிட்டப்படி காத்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணியளவில் பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா ‘ஹேப்பி நியூ இயர்’ என்று உற்சாகமாக கோஷமிட்டு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Tags : Tirupati temple ,Tirumala ,heaven ,Tirupati ,-headed ,Vaikunta Ekadashi ,Lord ,
× RELATED புத்தாண்டை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: கார்கே அறிவிப்பு