சென்னை: மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது,
டெல்லியை குளிர்விக்கவே எடப்பாடி அறிக்கை
தனது ஒனர் பாஜக செய்தது சரியென்றால் வெளிப்படையாக ஜி ராம் ஜி திட்டத்தை பழனிசாமி ஆதரிக்க முடியுமா?. ஒன்றிய அரசு நிதியில் செயல்படுத்திய 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு சிதைத்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்த தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. டெல்லியை குளிர்விக்கவே எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார்.
ஜிராம்ஜி திட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்க முடியுமா?
நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக்கோரி பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார். பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்’ தனது ஸ்டைலில் ‘அழுத்தம்’ கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் சவால்
ஜி ராம் ஜி என்ற புதிய சட்டம் மூலம் மாநிலங்களின் தலையில் நிதிச்சுமை ஏற்றியது பற்றி வாய் திறக்க பழனிசாமிக்கு வலிக்கிறது. வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடம் பிடித்ததற்கு தண்டனையாக தமிழ்நாட்டுக்கு வேலை நாட்களை ஒன்றிய அரசு குறைக்கிறது. 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?. தான் சுட்டிக்காட்டிய ஒன்றிய அரசின் திட்டத்தை வசதிக்காக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மறந்துவிட்டார்.
ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி!
ஜிராம்ஜி திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!. 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.
தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.
திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, ஜிஎஸ்டி வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை. கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் பழனிசாமி வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
