- பெர்ரினகர்
- அண்ணா திருமண வீடு
- கொளத்தூர்
- முதல் அமைச்சர்
- உத்தவ் தாக்கரே
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கொளத்தூர்,
- கிராம்.
- கே
- மீ.
- பெருநகர சென்னை மாநகராட்சி
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (18.12.2025), கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.25.72 கோடி செலவில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபாய் 17.47 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி என 2 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
கொளத்தூர், ஜி.கே.எம். காலனி, பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்கள் தங்களது இல்லத் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில் அதேசமயத்தில் வசதிமிக்க மண்டபத்தில் மனமகிழ்வுடன் நிறைவாக நடத்திடும் வகையில் ஜி.கே.எம். காலனி;
ஜம்புலிங்கம் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூபாய் 25.72 கோடி மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக சமுதாயக் கூடம் கட்டுவதற்கு கடந்த 7.3.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில், தரைத்தளத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடனும், முதலாம் தளத்தில் ஒரே சமயத்தில் 435 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடம், இரண்டாம் தளத்தில் 800 இருக்கைகளுடன் கூடிய திருமண மண்டபம், மூன்றாம் தளத்தில் 10 எண்ணிக்கையிலான தங்கும் அறைகள் மற்றும் மின்தூக்கி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த திருமண மாளிகையை நாளை (18.12.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, பல்வேறு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி சிறப்பிக்கவுள்ளார். பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை மூலமாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஏழை, நடுத்தர மற்றும் அனைத்து தரப்பு மக்களும், பெரிதும் பயன்பெறவுள்ளனர்.
கொளத்தூர், ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி
அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி கற்கும் வசதி ஏற்படுத்திடவும், வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு புதிய கட்டமைப்புகளுடன் அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் இயங்கிவந்த பழமையான அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்தும் வகையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூபாய் 11.17 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் புதிய பள்ளிக் கட்டடம் அமையவுள்ளது.
இப்பள்ளிக் கட்டடம், 23 வகுப்பறைகள், 5 ஸ்மார்ட் வகுப்பறைகள், இயற்பியல், வேதியியல், கணினி மற்றும் அறிவியல் என நான்கு நவீன ஆய்வகங்கள், தேர்வு மையம், நூலகம், ஆசிரியர்கள் அறை, அலுவலக அறை, கழிப்பறைகள் மற்றும் சிறார் விளையாட்டு பகுதிகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
கொளத்தூர், பெரியார் நகர் அமுதம் அங்காடி
கொளத்தூர், பெரியார் நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வந்த, பழமையான அமுதம் அங்காடியை மேம்படுத்தும் வகையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூபாய் 6.30 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் புதிய அமுதம் அங்காடி அமையவுள்ளது.
இக்கட்டடத்தில் இடமகன்ற அமுதம் பல்பொருள் அங்காடி, அலுவலக அறை, பணியாளர்கள் அறை, சேமிப்பு கிடங்கு, மின்தூக்கி வசதிகள், நகரும் படிக்கட்டுகள், நவீன கழிப்பறைகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இப்புதிய அங்காடியின் மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.
