கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

பெரியகுளம்: நீர்ப்பிடிப்பில் கனமழையால், கும்பக்கரை அருவியில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அவ்வப்போது தடை விதிக்கப்படுகிறது‌.

அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பிற்பகல் 4 மணி முதல் கனமழை பெய்தது. இதனால், கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளை வெளியேற்றினர். அருவியில் இன்று நீர்வரத்து குறைந்து சீரானால், சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் தெரிவித்தார்.

Related Stories: