அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி அதிமுக பிரமுகர் கைது: திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ.1 கோடி அளவுக்கு மோசடி செய்த அதிமுக பிரமுகரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த சுகுமார், சரவணன், செந்தில்முருகன், பிரகதா உள்பட 12 பேர் மாவட்ட எஸ்பி பாஸ்கரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: திண்டுக்கல் ஆர்எம் காலனி 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோனா சுருளிவேல் (46). திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரான இவர், கூட்டுறவு சங்க ஒன்றிய குழு துணை தலைவர், 2011ம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சி 4வது வார்டு கவுன்சிலர் பதவிகளில் இருந்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு இவருடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியின் போது கூட்டுறவு வங்கி, மீன்வளத்துறை, மின்சார வாரியம், ஆவின், மாநகராட்சியில் அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதனை உண்மை என நம்பிய நாங்கள் எங்களின் மகன், மகள்களுக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கூறினோம். அதற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை அவரிடம் கொடுத்தோம். 12 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடி வரை பெற்று கொண்ட அவர் வேலை வாங்கி தராததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம்.

அப்போது எங்களுக்கு தனித்தனியாக காசோலைகளை வழங்கினார். அவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற  போது கொலை மிரட்டலும் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சோனா சுருளிவேலை நேற்று கைது செய்து திண்டுக்கல் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* ஓபிஎஸ், இபிஎஸ் உடன் நெருக்கம்

கைதான சோனா சுருளிவேல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர் என கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவர்களுடன் நின்று இவர் எடுத்துள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related Stories: