பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 13,331 ஆசிரியர்கள் நியமனம்: ரூ.7,500 முதல் ரூ.12,000 வரை மதிப்பூதியம் வழங்க உத்தரவு

சேலம்: தமிழகத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம், 13,331 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ₹7,500 முதல் ₹12,000 வரை மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் 13,331 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் சிஇஓக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளி. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது.

தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை, பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை, ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 முடிய 10 மாதங்களுக்கும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜூலை-2022 முதல் பிப்ரவரி-2023 முடிய 8 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக, பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை, பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யும்போது, இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ₹7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ₹10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ₹12,000 வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். காலிப்பணியிடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்களை மட்டுமே, எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நிரப்பிக் கொள்ளவேண்டும். இந்த காலிப்பணியிடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கான ஒப்புகைச்சீட்டு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும். இது தணிக்கைக்கு உட்பட்டது.

சம்பந்தப்பட்ட பணியிடத்திற்கு, பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படின், பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர் இருப்பின், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இதேபோல், முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில், இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: