வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரத்தில் புழுக்கத்தினால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கொளுத்தி எடுக்கும் வெயிலை கருத்தில் கொண்டு தேவையின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை வட உள் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவை பின்வருமாறு;

* காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும்.

* மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி, சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்.

* தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.

* வெப்பம் அதிகமாக உள்ள துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

* அறிவுறுத்தல்கள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா? என்பதை துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: