சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான், அங்கு சினிமா துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த்சிங் உள்பட பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதற்கு சல்மான் கான் தான் காரணம் என சொல்லப்படுகிறது. அதேபோல், சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால், இவரது சிபாரிசு இருந்தால் எளிதில் நடக்கும். அத்தகைய சல்மான் கானை சினிமா துறையினர் யாரும் விமர்சிக்க பயப்படுவார்கள். ஆனால் தமிழ் நடிகையான காஜல் அகர்வால் துணிச்சலாக அவரை தாக்கி பேசியிருக்கிறார்.
இது குறித்து காஜல் அதர்வால் கூறியதாவது: தென்னிந்திய சினிமாவில் நேரம் தவற மாட்டார்கள். சொன்னால் சொன்ன நேரத்திற்கு வந்துவிடுவார்கள். நானும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு செல்வேன். ஆனால் இந்தி திரையுலகில் அப்படி கிடையாது. நேரம் தவறாமை பற்றி தென்னிந்திய சினிமாவிடம் இருந்து பாலிவுட் ஆட்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
என் சிறு வயது கிரஷ் சல்மான் கான். அவருடன் சிக்கந்தர் படத்தில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் இருப்பதிலேயே என்னை அதிக நேரம் காக்க வைத்த நடிகர் சல்மான் கான் தான். இது எனக்கு பழக்கமான விஷயம் கிடையாது. ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு, ஹீரோ (சல்மான் கான்) எங்கே காணோம் என வியந்திருக்கிறேன். அவர் மதியம் அல்லது மாலை நேரத்தில் தான் படப்பிடிப்புக்கு வருவார்.
அதனால் செட்டில் சும்மா இருக்காமல் அங்குள்ள ஜிம்மில் ஒர்க்அவுட் செய்ய சென்றுவிடுவேன். தென்னிந்தியாவில் ஹீரோயின்களை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். ஹீரோயின்களின் இடுப்பை மாட்டும் காட்டுவது கிடையாது என்றார். படப்பிடிப்புக்கு சல்மான் கான் எப்பொழுதுமே லேட்டாக வருகிறார் என்று பாலிவுட்டில் கிசுகிசுப்பது உண்டு.
இந்நிலையில் காஜல் அகர்வால் ஓபனாக பேசியது சல்மான் கான் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. ‘நடிச்சது சிறு கதாபாத்திரம், இதில் பில்ட்அப்பை பாரு’ என்கிறார்கள். சல்மான் பற்றி விமர்சித்திருப்பதால் பாலிவுட்டில் காஜலுக்கு எதிர்காலம் இல்லை எனவும் இந்தி ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள். அதே சமயம் தில்லாக கருத்து சொன்ன காஜலை தென்னிந்திய ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
