மும்பை: பாலிவுட் நடிகை மவுனி ராய் (40), டி.வி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘நாகினி’ என்ற டி.வி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான அவர், 2022ல் துபாய் தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை காதல் திருமணம் செய்தார். பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில், தனது நண்பர்கள் அனுஷா தண்டேகர், அர்ஜுன் பிஜ்லானி ஆகியோருடன், மும்பை பந்த்ராவில் இருக்கும் உணவகத்துக்கு இரவு நேரத்தில் சாப்பிட சென்றிருந்த மவுனி ராய், பிறகு உணவகத்தை விட்டு வெளியேறி காரில் ஏறியபோது, திடீரென்று சில போட்டோகிராபர்கள் சூழ்ந்துகொண்டு, ஜன்னல் வழியாக அவர்களை வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்தனர்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த மவுனி ராய், கார் கண்ணாடியை கீழே இறக்கி, கோபத்துடன் விரலை நீட்டி, இந்தியில் ‘பந்த் கரோ’ (நிறுத்துங்கள்) என்று ஆவேசத்துடன் கத்தினார். அவரை சமாதானப்படுத்திய அனுஷா தண்டேகர், அங்கிருந்து போட்டோகிராபர்கள் விலகி செல்லும்படி கத்தினார்.
இதையடுத்து மவுனி ராய் வெளியிட்ட பதிவில், ‘தயவுசெய்து என்னை இனிமேல் போட்டோ எடுக்காதீர்கள். நான் உங்களை நீண்ட நாட்களாக அழைக்கவில்லை. உங்களை மதிக்கிறேன். ஆனால், என்னை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்க மாட்டேன். தயவுசெய்து என்னை நோக்கி வராதீர்கள்’ என்று குறிப்பிட்டார். அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, உடனே அப்பதிவை நீக்கிவிட்டார்.
