ஐதராபாத்: ஆர்யா மீது ரூ.1.80 கோடி மோசடி செய்ததாக, ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாளம் மற்றும் தமிழில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘அனந்தன் காடு’ என்ற படம், கடந்த ஜூன் 25ம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான கேமராக்கள், லைட்டுகள் போன்றவற்றை வாடகைக்கு எடுத்த ஆர்யா, அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக, ஒரு தனியார் நிறுவனம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அதன்படி, கடந்த 2025ல் தாஹேர் சினி டெக்னிக் நிறுவனத்திடம், ‘அனந்தன் காடு’ படப்பிடிப்புக்காக, அதிநவீன உபகரணங்களை தயாரிப்பு நிறுவனம் ரூ.2.12 கோடிக்கு வடகைக்கு எடுத்துள்ளது. அந்த தொகையில் ரூ.1.80 கோடி இன்னும் கொடுக்கவில்லை என்றும், அந்த பணத்தை கேட்க சென்ற தாஹேர் சினி டெக்னிக் கணக்காளர் ஜாவித் அலி என்பவரை மிரட்டியதாகவும் சொல்லி, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார், ஆர்யா, அவரது உதவியாளர் கிஷோர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில் ஆர்யா மற்றும் படக்குழுவினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
