சென்னை: இந்தியாவில் பிரபல நடிகைகள் பலர் தங்களின் கருமுட்டைகளைப் பாதுகாக்கும் முடிவை எடுத்துள்ளனர். இந்த டிரெண்ட் சினிமா துறையில் வேகமாக பரவி வருகிறது. மெஹ்ரீன் பிர்சதா, தமிழில் தனுஷுடன் ‘பட்டாஸ்’ மற்றும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ போன்ற படங்களில் நடித்த இவர், அண்மையில் தனது கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோவுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதைப் பற்றி சிந்தித்து, சரியான வயதில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
இது பெண்களின் எதிர்காலத் தாய்மைக்கான பாதுகாப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, தனது 30களின் ஆரம்பத்தில் கருமுட்டைகளைச் சேமித்து வைத்தார். சினிமாவில் தனது இலக்குகளை அடையவும், அந்த நேரத்தில் தனக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுக்காததாலும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். பின்னர், 2022ல் வாடகைத்தாய் மூலம் நிக் ஜோன்ஸ் – பிரியங்கா தம்பதியருக்குக் குழந்தை பிறந்தது.
பாலிவுட் நடிகையான இஷா குப்தா, தனது 31வது வயதில் (2017ம் ஆண்டு) கருமுட்டைகளை உறைய வைத்தார். மகேஷ்பாபு உடன் ‘நேநொக்கடைன்’ படத்தில் நடித்த முன்னணி பாலிவுட் நடிகையான கிரித்தி சனோன் அண்மையில் தனது கருமுட்டைகளை உறைய வைப்பதாகத் தெரிவித்தார். அதேபோல, நடிகை அகன்ஷா ரஞ்சன் கபூர் மகளிர் தினத்தை ஒட்டி தனது கருமுட்டை காக்கும் பயணத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
இந்தச் செயல்முறை தரும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் ரீதியான சவால்கள் கடினமானவை என்றாலும், இது பெண்களுக்குத் தரும் சுதந்திரம் மிகப்பெரியது என்று அவர் விவரித்துள்ளார். திரைப்பட நடிகையான மோனா சிங், தனது 34வது வயதில் கருமுட்டைகளைச் சேமித்தார். தனது குடும்ப மருத்துவருடன் ஆலோசித்த பின், ‘‘இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன், எனது விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் தாயாக முடியும்’’ என்று மகிழ்ச்சியுடன் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான டயானா ஹைடன், இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் பரவலாக்கியவர்களில் முக்கியமானவர். தனது 32வது வயதில் கருமுட்டைகளைச் சேமித்த அவர், 46 வயதில் அதே உறைந்த கருமுட்டைகள் மூலம் வெற்றிகரமாகக் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்தியத் தொலைக்காட்சியின் முன்னணி தயாரிப்பாளரான ஏக்தா கபூர் தனது 36வது வயதில் கருமுட்டைகளைச் சேமித்து, பின்னர் வாடகைத்தாய் மூலம் தாயானார்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான ரீமா கபூரும் (அனில் கபூரின் மகள்) இதேபோலத் தனது கருமுட்டைகளைப் பாதுகாத்துள்ளார். ரிச்சா சத்தா கோவிட் பெருந்தொற்று காலத்தில் தனது கருமுட்டைகளைச் சேமித்தார். கஜோலின் தங்கையான தனிஷா முகர்ஜி, தனது 39வது வயதில் கருமுட்டைகளை உறைய வைத்தார். தொலைக்காட்சி நடிகையான ரிதிமா பண்டிட் தனது 32வது வயதில் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டார்.
* ஏன் இந்த முடிவு?
பிரபலங்கள் ஏன் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பது பலரது கேள்வியாக உள்ளது. பெண்களின் வயது கூடும்போது கருமுட்டைகளின் தரம் குறையும். குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும். ஆரோக்கியமான இளம் வயதிலேயே முட்டைகளைச் சேமிப்பது பிற்காலத்தில் ஆரோக்கியமான குழந்தை பெற உதவுகிறது. திரைவாழ்க்கை மற்றும் இலக்குகள், படப்பிடிப்புகள், விளம்பர ஒப்பந்தங்கள் காரணமாகத் திருமணத்தை தள்ளிப்போட வேண்டிய சூழலில், அவர்களுக்குப் பயத்தைத் தருகிறது. அவசரமாக யாருடனாவது திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்து, பொருத்தமான துணை கிடைக்கும் வரை காத்திருக்க இது வழிவகுக்கிறது.
* எவ்வளவு செலவு?
கரு முட்டை பாதுகாக்கும் மருத்துவ சிகிச்சைக்கு சென்னையில் ரூ.1,40,000 முதல் ரூ.2,30,000 வரை செலவாகிறது. மும்பையில் ரூ.1,80,000 முதல் ரூ.2,80,000 வரை. பெங்களூருவில் ரூ.1,60,000 முதல் ரூ.2,40,000 வரை.
