சென்னை: ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ என்ற படத்தில் அறிமுகமானவர், லிசி ஆண்டனி. தற்போது பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் 6 இயக்குனர்கள் இணைந்துள்ள படத்தின் மூலம் 75வது படத்தை நெருங்கியுள்ளார். ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் அவர் ஏற்றிருந்த ஊராட்சி மன்ற தலைவர் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி: ஷிப்பிங்கில் பல லட்ச ரூபாய் சம்பாதித்த நான், நடிப்பு ஆர்வம் காரணமாக திரைத்துறைக்கு வந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் 75 படங்களை நெருங்கிவிட்டேன்.
சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்தேன். செல்லா அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி’ படத்தின் 2 பாகங்களும் என்னை பட்டிதொட்டி முழுக்க பிரபலமாக்கிவிட்டது. பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தில் சோபிதா துலிபாலாவுக்கு அம்மாவாக நடிக்கிறேன். ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘குயிலி’ போன்ற படங்களில் ஏற்றிருந்த மாறுபட்ட கேரக்டர்களை போல் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.
நிஜ வாழ்க்கையில் நான் மிகவும் கலகலப்பானவள். திரையில் அதற்கு நேரெதிரான வேடங்களே கிடைத்து வருகிறது. வில்லியாகவும், இரட்டை வேடங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை. ஆனால், பிற்காலத்தில் திரைப்படம் இயக்குவேன். ‘கார்கியின் தாய்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன்.
