தொழிலதிபர் எம்.கே.சாம்பசிவத்தின் மகள் இவானா வருண், வெவ்வேறு காலக்கட்டத்தில் மூவரை காதலிக்கிறார். காதல் கைகூடி திருமண நேரம் நெருங்கும் நிலையில், ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். அதற்கு காரணம் தனது தந்தை என்று இவானா வருண் போலீசில் புகார் கொடுக்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் பிரஜின் தீவிர விசாரணையில் ஈடுபடும்போது பல மர்மங்கள் வெளியாகி அதிர வைக்கிறது.
அது என்ன? நிஜ கொலையாளி யார்? அவர்கள் கொல்லப்படுவதற்கு என்ன காரணம் என்பது, யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ். இன்ஸ்பெக்டர் கேரக்டர் பிரஜினுக்கு பொருத்தமாக இருக்கிறது. இயல்பாக நடித்து அசத்தியுள்ளார். காதலியின் கடந்த காலத்தை கண்டறிந்து அதிர வைக்கிறார். இவானா வருணின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. கிளைமாக்சில் அசத்தியுள்ளார்.
தந்தையாக தயாரிப்பாளர் எம்.கே.சாம்பசிவம், தாயாக செந்தி, மனோதத்துவ டாக்டராக அனுபமா குமார் மற்றும் அதிரன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், பத்மன் ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளனர். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவும், ஹரி எஸ்.ஆர் பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன. காதல், கிரைம், உளவியல் போன்ற ஜானர்களில் சந்தோஷ் ராவணன் எழுதி இயக்கியுள்ளார். கிளைமாக்ஸ் புதிது. பிற்பகுதி விறுவிறுப்பு முற்பகுதியிலும் இருந்திருக்கலாம். எனினும், திரைக்கதை யுக்தி கவனத்தை ஈர்க்கிறது.
