ஐதராபாத்: ‘பெத்தி’ படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் ஜான்வி கபூர். இந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பி, இயக்குனர் புச்சிபாபு சனா மீது விமர்சனங்கள் எழுந்தது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்டு, அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கினார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி கூறியதாவது: கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் ஹீரோயின்களுக்கு இல்லை என்கிறார்கள்.
அப்படி எல்லாம் கிடையாது. தங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை அவர்களால் தேர்வு செய்ய முடியும். ஒரு கதாபாத்திரம் தங்களுக்கு சவுகரியமாக இல்லை என்றால் அதில் நடிக்க மறுத்த பல நடிகைகளை பார்த்திருக்கிறோம். ஒரு கதாபாத்திரம் எப்படி எல்லாம் இருக்கும் என்று கதையை சொல்லும்போதே விரிவாக சொல்லிவிடுவார்கள்.
எல்லா விவரத்தையும் கேட்ட பிறகே நடிக்கலாமா வேண்டாமா என்று கலைஞர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் எல்லா பழியையும் இயக்குனர்கள் மீது போடுவது சரி அல்ல. தானாக விருப்பப்பட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு தான் படங்களில் நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். யாரும் துப்பாக்கிமுனையில் அவர்களை மிரட்டி நடிக்க வைப்பது இல்லை என்றார்.

