மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ என்ற படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் அறிமுகமானார்கள். தற்போது இருவரும் பிசியான ஹீரோயின்களாக மாறியுள்ள நிலையில் அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘எனக்கு சிறுவயதில் இருந்தே வண்ணங்கள் மீது கொள்ளைப்பிரியம் என்றாலும், ஓவியம் வரைவதை நான் ஒருபோதும் தீவிரமாக மேற்கொண்டது இல்லை. அப்போது சாய் பல்லவி தனது வாட்டர் கலர்களை என்னிடம் கொடுத்தார். அந்த எளிய செயல்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக அமைந்தது.
எனக்குள் இப்படியொரு திறமை மறைந்திருப்பது எனக்கே தெரியாமல் இருந்தபோது, அதை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக சாய் பல்லவிக்கு எனது அன்பும், மனமார்ந்த நன்றிகளும். லவ் யூ டார்லிங்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவுக்கு பதிலளித்துள்ள சாய் பல்லவி, ‘எனது அன்பு பேபியே. உனது ஓவியங்கள் மிகவும் தனித்துவமானவை, அழகானவை. உன்னுடைய திறமை இப்படி வளர்வதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பாராட்டியுள்ளார்.
