கடுமையான தண்ணீர் பிரச்னை; மகேஷ் பாபு படத்துக்கு திடீர் சிக்கல்

சென்னை: ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகும் பான்வேர்ல்ட் படம், ‘வாரணாசி’. இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு தண்ணீருக்கு அடியில் இடம்பெறும் பிரமாண்டமான அதிரடி ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படமாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார். இக்காட்சியில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா இணைந்து நடிக்கின்றனர். இதற்காக ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மிகப் பிரமாண்டமான நீச்சல் குளம் செட் அமைக்கப்பட்டு, ஒரு லாரிக்கு 10 ஆயிரம் லிட்டர் என்று, கிட்டத்தட்ட 150 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று, நகராட்சி அதிகாரிகளிடம் படக்குழு கோரிக்கை வைத்தது.

ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு தயங்கினர். தற்போது ஐதராபாத்தில் கோடைகாலம் உச்சத்தில் இருப்பதால், பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, இவ்வளவு பெரிய அளவிலான தண்ணீரை படப்பிடிப்புக்கு வழங்க முடியாது என்று மறுத்துவிட்டனர். எனினும் படப்பிடிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, படக்குழுவினர் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மே மாதம் முழுவதும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார்.

Related Stories: