இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வெளியான ‘பூத் பங்களா’ என்ற இந்தி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. இது பிரியதர்ஷன் இயக்கியுள்ள 99வது படமாகும். விரைவில் அவர் தனது 100வது படத்தை மலையாளத்தில் மோகன்லாலை வைத்து இயக்குகிறார். அவர் தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து மலையாள படத்தை இயக்கினார். அவரே 100வது படத்திலும் மோகன்லாலை இயக்குவது விசேஷமாக பார்க்கப்படுகிறது.
இப்படம் இசையை மையமாக வைத்து உருவாகிறது. சுமார் 12 பாடல்கள் இடம்பெறும் என்று பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘நான் இயக்கும் 100வது படத்தில் தந்தை, மகன் இருவரும் கர்நாடக இசையில் சிறந்த கலைஞர்கள். ஒருவேளை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிருடன் இருந்திருந்தால், அவரையே தந்தையாக நடிக்க வைத்திருப்பேன். இதற்கு முன்பு சில படங்களில் மோகன்லால் பாடியிருந்தாலும், எனது 100வது படத்தில் அவரை பாட வைக்க மாட்டேன்.
இசையை மையப்படுத்திய படமாக இருப்பதாலேயே அவரை பாட வைக்கவில்லை’ என்றார். இதன் இசை அமைப்பாளர் யார் என்று சொல்லாத அவர், தனது மகள் கல்யாணி பிரியதர்ஷனை இப்படத்தில் நடிக்க வைப்பாரா என்றும் தெரிவிக்கவில்லை.
