நடிகை யாமி கவுதமின் கணவர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், சாரா அர்ஜூன், ராகேஷ் பெராடி நடிப்பில், கடந்த டிசம்பரில் வெளியான ‘துரந்தர்’ படம், உலகம் முழுவதும் ரூ.1350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் நேற்று முன்தினம் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ளது. இப்படம் பிரீமியர் ஷோவில் மட்டும் உலகம் முழுவதும் 52.71 கோடி ரூபாய் வசூலித்தது.
படம் குறித்து அல்லு அர்ஜூன் கூறுகையில், ‘இந்தியில் ‘துரந்தர் 2’ படம் பார்த்தேன். தேசபக்தியிலும் ஒரு தனி ஸ்டைல். ஒவ்வொரு தேசபக்தனையும் இப்படம் பெருமைப்பட வைக்கும். கைத்தட்டல்களை அள்ளும் பல்வேறு தருணங்கள் நிறைந்திருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள். மாதவனும், மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் படம் நேர்த்தியாக இருக்கிறது. எனது சகோதரர் ரன்வீர் சிங் போல், மிகச்சிறந்த பன்முகத்தன்மை கொண்ட ஒரு நடிகர் நம் நாட்டில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
அவரது ஆட்டம் அனல் பறக்கிறது. ஆதித்யா தர் இப்படத்தை சிறப்பாக, எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் இயக்கியுள்ளார். அவரைப் போன்ற திறமையான இயக்குனர்கள் நம் நாட்டில் இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். திரையரங்கையே அதிரவைக்கும் ஒரு படைப்பு இது. இந்திய கதை, சர்வதேச தரத்திலான ஸ்டைலில் இருக்கிறது’ என்றார். ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.230 கோடிக்கு மேல் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இதில் நடித்திருக்கும் சாரா அர்ஜூன் உள்பட அனைவரது சம்பளமும் இந்திய அளவில் உயர்ந்துள்ளது.
